2016-06-20 16:29:00

ஒன்றாம் வகுப்பு மாணவி 1,330 குறள்கள் சொல்லி அசத்தல்


ஜூன்,20,2016. காரைக்குடி அழகப்பா அகாடமி பள்ளி ஒன்றாம் வகுப்பு மாணவி ஆறு வயது நிரம்பிய வைஷ்ணவி 1,330 திருக்குறள்களையும் அடிபிறழாமல் ஒப்புவித்து அசத்தி வருகிறார்.

காரைக்குடியைச் சேர்ந்த பெரிச்சியப்பன், லதா தம்பதி மகளான வைஷ்ணவி, 1,330 குறள்களையும் திணறாமல் ஒப்புவிக்கிறார். அவருக்கு எல்.கே.ஜி.,யிலேயே திருக்குறள்களை படிக்க அவரது தாயார் லதா கற்றுக் கொடுத்தார்.

சென்ற ஆண்டு திருச்சி திருமூலநாதர் அறக்கட்டளை நிகழ்ச்சியில் 500 குறள்களை ஒப்புவித்து பரிசு பெற்றார். காரைக்குடி வள்ளுவர் பேரவை விழாவில் 38 அதிகாரங்களை ஒப்புவித்து அறம் விருதை பெற்றார்.

வைஷ்ணவியின் தாயார் லதா கூறியதாவது: ஆரம்பத்தில் திருக்குறளைக் கதையாக கூறி புரிய வைத்தோம். அதன்பிறகு, அலைபேசி 'வாய்ஸ் ரெக்கார்டரில்' திருக்குறளை படித்து, அதை விளையாடும்போது கேட்கும்படி செய்தோம். எந்த முறையில் கேட்டாலும் 1,330 குறள்களையும் ஒப்புவிப்பாள். தமிழாசிரியர் ஜெயம்கொண்டானும் பயிற்சி அளித்தார். ஜூலையில் அனைவரது முன்னிலையிலும் அரங்கேற்றம் செய்யவும், திருக்குறள் செல்வி விருதுக்கு விண்ணப்பிக்கவும் உள்ளோம் என்றார்.

வைஷ்ணவி கூறுகையில், “அம்மா கற்றுக் கொடுத்ததால் சாதனை படைக்க முடிந்தது. ஒரு நாளைக்கு 20 குறள்கள் வீதம் படித்தேன்,” என்றார். 

ஆதாரம் : தினமலர் / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.