2016-06-14 16:33:00

திருஆட்சிபீடத்திற்கும் அருங்கொடை இயக்கத்திற்கும் உள்ள உறவு


ஜூன்,14,2016. திருஅவையின் வாழ்வுக்கும், மறைப்பணிக்கும் முக்கியமானவையாக இருக்கும் அருங்கொடை இயக்கங்களும், குழுக்களும், திருஅவை ஆட்சியாளர்க்குப் பணிந்திருப்பது அவசியம் என்று விசுவாசக் கோட்பாட்டுத் திருப்பேராயம் இச்செவ்வாயன்று வெளியிட்ட கடிதம் கூறுகிறது.

அருங்கொடை இயக்கங்களும், குழுக்களும் தன்னாட்சியுடன் மறைப்பணியாற்றுவதற்கு உரிமைகளைக் கொண்டிருக்கவில்லை என்று, திருஅவையை மீண்டும் இளமையுறச்செய்வது என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அக்கடிதம் மேலும் கூறுகிறது.

திருஅவையின் வாழ்வில் அருங்கொடை இயக்கங்களின் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டுள்ள அதேவேளை, இவை, தங்களைப் பற்றிய எண்ணங்களிலும், திருஅவைக்குத் தங்களின் பங்களிப்பை அளிப்பதிலும் பக்குவமடைந்த நிலையில் செயல்படுமாறும் வலியுறுத்தியுள்ளது அக்கடிதம்.

மேய்ப்பர்களுக்குப் பணிந்திருத்தல், அமைப்புமுறை திருஅவையையும், பிறரன்பின் திருஅவையையும் எதிர்க்காமல் இருத்தல், உண்மையான அருங்கொடைகளை ஆய்ந்தறிதல், திருஅவை சட்டத்துக்கு ஒத்திணங்கும் சட்டமுறையான அங்கீகாரம், உலகளாவிய திருஅவைக்கும், குறிப்பிட்ட தலத்திருஅவைகளுக்கும் இடையே உறவு இன்றியமையாதது, அன்னை மரியாவை எடுத்துக்காட்டாக நோக்குதல் போன்ற தலைப்புகளில் இக்கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.

திருஅவையின் வாழ்வுக்கும், மறைப்பணிக்குமென, திருஆட்சிபீடத்திற்கும் அருங்கொடை இயக்கத்திற்கும் இடையுள்ள உள்ள உறவு என்ற தலைப்பில் (Iuvenescit Ecclesia) இக்கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.