2016-06-10 15:41:00

திருத்தந்தை : கிறிஸ்தவர் கடவுளை வரவேற்க எழுந்து நிற்கிறார்


ஜூன்,10,2016. கடவுளை வரவேற்பதற்கு எழுந்து நிற்பது, அவரின் குரலைக் கேட்பதற்காக பொறுமையுடன் மௌனமாக நிற்பது, தான் பெற்ற நற்செய்தியை அறிவிப்பதற்கு உலகுக்குள் செல்வதற்குத் தயாராக இருத்தல் ஆகிய மூன்றும், கிறிஸ்தவரின் பண்புகளாகும் என்று இவ்வெள்ளி காலை திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வெள்ளி திருவழிபாட்டு வாசகங்களை மையப்படுத்தி, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை, கிறிஸ்தவ வாழ்வில் அச்சத்தால் முடக்கப்படும் நிலையை எச்சரித்தார்.

அச்சத்தை எப்படி தவிர்த்து வாழ்வது என்பதற்கு, இந்நாளைய முதல் வாசகத்தில் சொல்லப்பட்டுள்ள இறைவாக்கினர் எலியாவின் செயல்களைக் குறிப்பிட்டுப் பேசிய  திருத்தந்தை, கர்மேல் மலையில் பாகால் தெய்வத்தின் நூற்றுக்கணக்கான பக்தர்களை எலியா எவ்வாறு விசுவாசத்தால் தோற்கடித்து வெற்றியடைந்தார் என்பதையும் விளக்கினார்.

கடவுளைச் சந்திப்பதற்கு, மனிதர் படைக்கப்பட்ட நேரத்தில் இருந்த சூழலுக்குச் செல்ல வேண்டும், நிற்கவும் நடக்கவும் வேண்டும் என்றும், கடவுள் பெரும் சுழற்காற்றிலும், நிலநடுக்கத்திலும், தீயிலும் தம்மை எலியாவுக்குக் காட்டவில்லை, ஆனால் மெல்லிய ஒளியில் தம்மைக் காட்டினார் என்றும் கூறினார்  திருத்தந்தை.

இதற்குப் பின்னர் எலியாவைக் கடவுள், பணிக்கு அனுப்பினார் எனவும், நாமும் நம் வாழ்வின் துன்ப நேரங்களிலும், விசுவாசமின்றி இருக்கும் தருணங்களிலும் என எப்போதும் ஆண்டவரைத் தேட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, திறந்த இதயத்தோடு அவர் பேசுவதைக் கேட்க வேண்டும், அச்செய்தியை பிறருக்கு அறிவிக்க வேண்டும், இதுவே நம் பணி என்றும் மறையுரையில் கூறினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.