ஒரு வயதானத் தொழிலாளி சாலையில் பெரிய சுமையைத் தூக்கிக்கொண்டு நடந்தார். அவரைக் கண்டு பரிதாபப்பட்ட ஒரு லாரி ஓட்டுனர், லாரியை நிறுத்தி, அந்த தொழிலாளியை ஏறிக்கொள்ளச் சொன்னார். லாரியின் பின்புறம் தொழிலாளி ஏறியதும், லாரியை ஓட்டிச் சென்றார், ஓட்டுனர். சிறிது தூரம் போனதும், தொழிலாளி எப்படி இருக்கிறார் என்றறிய, திரும்பிப் பார்த்த ஓட்டுனர், அதிர்ச்சி அடைந்தார். காரணம்? வயதான அத்தொழிலாளி இன்னும் தன் தலையில் சுமையை சுமந்தவண்ணம், லாரியில் நின்றுகொண்டிருந்தார். லாரியை நிறுத்திவிட்டு பின்புறம் சென்ற ஓட்டுனர், அவரிடம், "ஐயா, அந்தச் சுமையை இறக்கி வைக்க வேண்டியதுதானே" என்று சொன்னதற்கு, வயதான அந்தத் தொழிலாளி, "வேண்டாம் ஐயா. நீ எனக்கு இடம் கொடுத்ததே பெருசு... இதையும் ஏன் உன் லாரி சுமக்கணும்? நானே சுமந்துக்கிறேன்" என்று சொன்னாராம்.
சுமைகளைச் சுமப்பதும், சுமைகளைப் பிறர் மீது சுமத்துவதும் நமக்குக் கைவந்த கலைகள். சுமைகளைக் குறைப்பதற்கு, இரக்கத்தின் காலம் நம்மை அழைக்கிறது. சுமை சுமந்து சோர்ந்திருப்போரை அழைக்கும் இயேசுவை நாடி வருவோம். சுமைகளை நீக்குவார். சுகம் தருவார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |