2016-06-04 16:23:00

திருத்தந்தை: தியாக்கோன்கள் பணிபுரிய அழைக்கப்பட்டுள்ளவர்கள்


ஜூன்,04,2016. பன்னாட்டு தியாக்கோன் மையம் உருவாக்கப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டை முன்னிட்டு, இதன் பிரதிநிதிகள் முப்பது பேரை, இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இயேசுவின் அன்புக் கட்டளையையும், தியாக்கோன்கள் பணிபுரிய அழைக்கப்பட்டுள்ளதையும் நினைவுபடுத்தினார்.

இயேசுவின் புதிய அன்புக் கட்டளையின் தெளிவான வெளிப்பாடாக, தொடக்ககாலத் திருஅவையில், தியாக்கோன்கள் ஏற்படுத்தப்பட்டதை மையப்படுத்திப் பேசிய திருத்தந்தை, இவர்கள் எப்பொழுதும் இறையன்பில் ஆழமான விசுவாசம் கொண்டு வளர, இறைவன் உதவுவாராக என்று செபித்து வாழ்த்தினார்.

இந்த இரக்கத்தின் யூபிலி ஆண்டில், இந்த மையத்தின் ஐம்பதாம் ஆண்டு நிறைவு சிறப்பிக்கப்படுவதைக் குறிப்பிட்ட திருத்தந்தை, நம் வாழ்விலும், நம் பணியிலும் இரக்கத்தின் முக்கியத்துவத்தைப் புதுப்பிக்கும் ஒரு விழிப்புணர்வை இந்த நிகழ்வு வழங்குகிறது என்றார்.

பிறருக்குச் சேவை புரிவதில் இயேசுவைப் பின்செல்லுதல், நமக்குச் சேவையாற்ற விரும்பும் அன்பே உருவான இறைவனைப் பின்பற்றுதல், என, இயேசுவின் கட்டளையைத் தியாக்கோன்கள் சிறப்பான விதத்தில் வெளிப்படுத்துகின்றனர் என்றும் கூறிய திருத்தந்தை, தனக்காகச் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.