ஜூன்,02,2016. தற்போது திருஅவையில் சிறப்பிக்கப்படும், அருள்பணியாளர்களுக்கான மூன்று நாள் யூபிலி கொண்டாட்டங்களுக்காக செபிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இப்புதன் முதல் வெள்ளிவரை உரோம் நகரில் இடம்பெறும் அருள்பணியாளர்கள் யூபிலி கொண்டாட்டங்களை முன்னிட்டு, தன் டுவிட்டர் தளத்தில் இவ்வழைப்பை விடுத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'ஜூன் முதல் தேதி முதல் 3ம் தேதி வரை இடம்பெறும் அருள்பணியாளர்கள் யூபிலி கொண்டாட்டத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்து செபிப்போம்' என அதில் கூறியுள்ளார்.
இந்த மூன்று நாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இவ்வியாழனன்று இடம்பெற்ற அருள்பணியாளர்கள் தியானத்தில், உரோம் நகரின் புனித ஜான் லாத்ரன், மேரி மேஜர் மற்றும் பவுல் பசிலிக்கா பேராலயங்களுக்குச் சென்று, அருள்பணியாளர்களுக்கு தியான சிந்தனைகளை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அருள்பணியாளர்கள் யூபிலி கொண்டாட்டங்களில் திருத்தந்தையும் கலந்துகொள்வதால், இவ்வாரம் சாந்தா மார்த்தா சிற்றாலயத்தில் திருத்தந்தையின் வழக்கமான காலை திருப்பலி இடம்பெறாது என்பது ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |