மே,26,2016. உலகளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியால், 2008ம் ஆண்டுக்கும், 2010ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், மேலும் ஐந்து இலட்சம் பேர் புற்றுநோயால் இறந்தனர் என்று, புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.
வேலை வாய்ப்பின்மை, நலவாழ்வுச் செலவுகள் குறைப்பு ஆகியவை அதிகரித்த காரணங்களால், 2008ம் ஆண்டுக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளில், புற்றுநோய் தொடர்பாக மேலும் 2, 60, 000 மரணங்கள் நிகழ்ந்ததாக இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மட்டும், மேலும் ஒரு இலட்சத்து அறுபதாயிரம் இறப்புகள் நிகழ்ந்துள்ளன. ஆயினும், பிரிட்டன், மற்றும் இஸ்பெயினில், குடிமக்கள் அனைவருக்கும், நலவாழ்வுப் பாதுகாப்பு வழங்கப்படுவதால், புற்றுநோய் தொடர்பான இறப்புகள் கூடுதலாக ஏற்படவில்லை.
உலகில், 2012ம் ஆண்டில் மட்டும், ஏறத்தாழ 82 இலட்சம் பேர் புற்றுநோயால் இறந்தனர் என்று அவ்வாய்வு தெரிவிக்கிறது.
புற்றுநோய் தாக்கத்தை பொருளாதார நடவடிக்கைகள் எவ்வாறு பாதிக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டிய முக்கியத்துவத்தை, இலண்டன் Imperial கல்லூரியை சேர்ந்த, அறிவியலாளர் Mahiben Maruthappu அவர்கள் விளக்கியுள்ளார்.
ஆதாரம் : AFP / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |