மே,25,2016. உலகளவில் ஆயிரக்கணக்கான உயிரினங்கள் வேட்டையாடப்படுவதும், சட்டத்துக்குப் புறம்பே வர்த்தகம் செய்யப்படுவதும், சுற்றுச்சூழலுக்கு உண்மையான ஆபத்துக்களை முன்வைக்கின்றன என்று, ஐ.நா. நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.
ஐ.நா.வின் UNODC போதைப்பொருள் மற்றும் குற்றத் தடுப்பு நிறுவனம் இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆயிரக்கணக்கான தாவர வகைகளும், விலங்கினங்களும் சட்டத்துக்குப் புறம்பே வர்த்தகம் செய்யப்படும் வனவாழ்வு மற்றும் காடுகள் சார்ந்த குற்றங்கள், சில நாடுகள் அல்லது சில பகுதிகள் என்ற வரையறையின்றி, உலகளாவிய விவகாரமாக மாறியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
காடுகள் சார்ந்த குற்றங்களைத் தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தும் இந்நிறுவனம், 2016ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி, கென்யாவின் நைரோபியில், ஏழாயிரத்துக்கு மேற்பட்ட யானைகளின் 105 டன்கள் தந்தங்களும், காண்டாமிருகத்தின் 1.35 டன்கள் கொம்புகளும் எரிக்கப்பட்டுள்ளன என்றும் கூறியது.
120 நாடுகளிலிருந்து, காடுகளோடு தொடர்புடைய 1,64,000த்துக்கு மேற்பட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட குற்றங்கள் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளன என்றும் UNODC நிறுவனம் கூறியது.
ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |