2016-05-21 14:56:00

பாத்திமாவின் 3வது இரகசியம் முழுதுமாக வெளியிடப்பட்டுவிட்டது


மே,21,2016. பாத்திமாவின் மூன்றாவது இரகசியம் முழுவதுமாக வெளியிடப்பட்டுவிட்டதை உறுதிசெய்துள்ள அதைவேளை, இந்த இரகசியம் வெளியிடப்பட்ட இரண்டாயிரமாம் ஆண்டில், இது முழுமையாக இல்லை என்று, தான் யாரிடமும் ஒருபோதும் கூறவில்லை என்று முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அண்மை நாள்களாக, பாத்திமாவின் மூன்றாவது இரகசியம் குறித்து பல்வேறு கட்டுரைகள் வெளிவருவதை முன்னிட்டு திருப்பீடச் செய்தித் தொடர்பகம் இச்சனிக்கிழமையன்று இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.  

கர்தினால் ஜோசப் ராட்சிங்கர் அவர்கள்(முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்), 2000மாம் ஆண்டு ஜூன் மாதத்தில், பாத்திமாவின் மூன்றாவது இரகசியத்தை வெளியிட்டார். அச்சமயத்தில் இது முழுவதுமாக வெளியிடப்படவில்லை என, தன்னிடம் கர்தினால் ராட்சிங்கர் அவர்கள் கூறியதாக, பேராசிரியர் Ingo Dollinger கூறி வருகிறார். இது குறித்துக் கூறிய முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக் அவர்கள், இந்த இரகசியம் முழுவதுமாக, வெளியிடப்பட்டுவிட்டது, பேராசிரியர் Dollinger அவர்களோடு தான் ஒருபோதும் பேசியதில்லை, இது குறித்து அவர் கூறுவது முழுவதும் அவரின் கண்டுபிடிப்புகள், அவர் கூறுவது முற்றிலும் உண்மையல்ல என்று கூறியுள்ளார்.

செபமாலை அன்னை என அழைக்கப்படும், போர்த்துக்கல் நாட்டு பாத்திமா அன்னை மரியா, 1917ம் ஆண்டு மே 13ம் தேதி முதல் அக்டோபர் 13ம் தேதி வரை, லூசியா சாந்தோஸ், ஜசிந்தா, பிரான்சிஸ் மார்த்தோ ஆகிய மூன்று சிறார்க்கு ஆறு முறைகள் காட்சியளித்தார். அச்சமயங்களில் மூன்று இரகசியங்களை இச்சிறார்க்கு வெளிப்படுத்தினார் அன்னை மரியா. அவை பின்னர் எழுதப்பட்டு திருத்தந்தையிடம் கொடுக்கப்பட்டன. அவற்றில் மூன்றாவது இரகசியம் வெளியிடப்படாமலேயே இருந்தது. 2000மாம் யூபிலி ஆண்டில், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், 3வது இரகசியத்தை வெளியிடத் தீர்மானித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.