2016-05-19 15:17:00

மனிதாபிமான உலக உச்சி மாநாட்டிற்குச் செல்லும் திருப்பீடக்குழு


மே,19,2016. மே 23,24 ஆகிய இருநாள்கள் துருக்கியின் இஸ்தான்புல்லில் நடைபெறும், மனிதாபிமான உலக உச்சி மாநாட்டிற்கு, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் தலைமையில், பிரதிநிதிகள் பலர் அடங்கிய குழு ஒன்று, திருப்பீடத்தின் சார்பில் கலந்துகொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பீடச் செய்தித் தொடர்பாளரான இயேசு சபை அருள் பணியாளர் பெதெரிக்கோ லோம்பார்தி அவர்கள் இப்புதனன்று இந்த விவரத்தை செய்தியாளர்களிடம் வெளியிட்டார்.

ஐ.நா.அவை தலைமையகத்தில் நடைபெறும் கூட்டங்களில் திருப்பீடத்தின் சார்பாக பங்கேற்கும் பேராயர் பெர்னதித்தோ அவுசா, ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. கூட்டங்களில், திருப்பீடத்தின் சார்பாக பணியாற்றிவந்த பேராயர் சில்வானோ தொமாசி, ஆகியோரும், இன்னும் சில திருப்பீட அதிகாரிகளும் கர்தினால் பரோலின் அவர்களுடன், இம்மாநாட்டில் கலந்து கொள்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மனித சமுதாயத்தில் மிகவும் நலிந்த மக்களுக்கு நாம் ஆற்றவேண்டிய கடமைகள் குறித்து கருத்துப்பரிமாற்றம் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள, வத்திக்கான் வானொலியின் சார்பிலும் ஒரு சிலர் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.