2016-05-17 15:55:00

கருணைக் கொலைக்கு இந்திய ஆயர்கள் எதிர்ப்பு


மே,17,2016. இந்தியாவில், கருணைக்கொலையைச் சட்டமாக்குவதற்கு மத்திய அரசு முயற்சித்துவரும்வேளை, இது மனித வாழ்வின் மாண்புக்கு எதிரானது என்று சொல்லி, அதற்கு தங்களின் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர் இந்திய ஆயர்கள்.

கருணைக்கொலை குறித்த இந்தியக் கத்தோலிக்கரின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ள, இந்திய ஆயர்கள் பேரவையின் நலவாழ்வு ஆணையத்தின் செயலர் அருள்பணி Mathew Perumpil அவர்கள், அரசு, கருணைக்கொலையைச் சட்டமாக்கினால், மக்கள் மனம்போன போக்கில் செயல்படத் தொடங்குவார்கள் என்று எச்சரித்துள்ளார். 

கருணைக்கொலையின் நோக்கம் எதுவாக இருப்பினும், இது அறநெறிப்படி ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்று தெரிவித்தார் அருள்பணி Perumpil.

இந்திய காரித்தாஸ் இயக்குனர் அருள்பணி Frederick D’Souza அவர்களும், அரசு சட்டமாக்க முயற்சிக்கும் passive euthanasia, தனது விருப்பத்தை தெரிவிக்க இயலாத நிலையிலுள்ள ஒரு மனிதரைக் கொல்வதற்குச் சமம் என்று கூறினார்.

"Passive euthanasia" என்பது, ஒரு நோயாளிக்கு மரணத்தை வருவிக்கும் நோக்கத்தில், அவருக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சையை நிறுத்தி விடுவதாகும். எடுத்துக்காட்டாக, சிறுநீரகங்கள் செயல்படாமல் இருக்கும் ஒரு நோயாளிக்கு, அவர் உயிர் வாழ்வதற்கு உதவும் டயாலிசிஸ் சிகிச்சைக் கருவியை மருத்துவர்கள் திட்டமிட்டு அகற்றிவிடுவதாகும்.

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.