2016-05-16 15:43:00

இது இரக்கத்தின் காலம் : தேவை, அதிர்ஷ்டம் அல்ல, தன்னம்பிக்கை


வறுமையில், கஷ்டப்பட்டு குடும்பத்தை நடத்தி வந்த ஒருவர், ஒருநாள் தெருவில் பழங்கால நாணயம் ஒன்றைக் கண்டெடுத்தார். அந்த நாணயத்தின் நடுவே ஒரு துளை. துளையிட்ட நாணயம் கிடைத்தால் அதிர்ஷ்டம் வரும் என்ற ஒரு நம்பிக்கை இருந்தது. எனவே அவர், இனி என் வாழ்வில் அதிர்ஷ்டம் வரும், நான் பணக்காரன் ஆகிவிடுவேன் என்று சொல்லிக்கொண்டே, அந்தக் காசை, தனது கோட்டுப் பையிலே பத்திரமாகப் போட்டு வைத்தார். வெளியே அதை எடுக்கவே மாட்டார். சில ஆண்டுகளில், உண்மையிலேயே பணம், பதவி, புகழ் எல்லாம் வந்து சேர்ந்தன. சமூகத்தில் ஒரு பெரிய மனிதரானார். எல்லாரும் அவரைப் பாராட்டினார்கள். அவர் எதைத் தொட்டாலும் வெற்றி தேடி வந்தது. எல்லாம் அந்த நாணயத்தின் மகிமை என்று, அவர் தனது மனதில் நினைத்துக்கொண்டார். தினமும் அந்தக் கோட்டைப் போட்டுக்கொண்டுதான் வெளியே புறப்படுவார். உள்ளே அந்தக் காசு இருக்கிறதா என்பதைத் தொட்டுப் பார்த்து உறுதி செய்து கொள்வார். இப்படியே சில ஆண்டுகள் ஒடிப்போய் விட்டன. அந்தத் துளையிட்ட காசை எடுத்து, கண்ணால் பார்க்க வேண்டுமென்று ஒருநாள் அவருக்கு ஆசை. காலையில் பசியாறிக்கொண்டிருந்தபோது தனது ஆசையை மனைவியிடம் சொன்னார். இப்போ எதுக்கு அந்த ஆசை? என்றார் மனைவி. இல்லை உடனே பார்க்கணும் என்று அதை வெளியே எடுத்தார். அந்தக் காசில் துளையில்லை. அதிர்ந்துபோனார். அப்போது அவரின் மனைவி நடந்ததைச் சொன்னார். அவர் அந்தக் காசை எடுத்த மறுநாள், கோட்டுத் தூசியாக இருக்கிறதே என்று வெளியே உதறினார் மனைவி. அதில் காசு இருப்பதை மனைவி மறந்துவிட்டார். அந்தக் காசு தெருவில் விழுந்து விட்டது. எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. தெரிந்தால் வருத்தப்படுவாரே என்று நினைத்த அவர் மனைவி, அவரின் கோட்டுப் பைக்குள் ஒரு காசைப் போட்டு வைத்தார். இதை மனைவி சொன்னவுடன், இது நடந்தது எப்போது? என்று அவர் கேட்டார். அந்தக் காசு கிடைத்த மறுநாள் என்றார் மனைவி(இராமகிருஷ்ணர் கதை).

ஆம். வாழ்வில் முன்னேற அதிர்ஷ்டம் தேவையில்லை. தன்னம்பிக்கை தேவை. கடவுள் நம்பிக்கை தேவை.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.