2016-05-07 14:51:00

விண்ணேற்றப் பெருவிழா / அன்னை தினம் : ஞாயிறு சிந்தனை


அமெரிக்காவில், வெர்ஜீனியா மாநிலத்தில் வாழும் அனயா எல்லிக் (Anaya Ellick) என்ற 7 வயது சிறுமி, தேசிய அளவில் நடைபெற்ற கையெழுத்துப் போட்டியில் Penmanship என்ற விருதை, மே 5, இவ்வியாழனன்று வென்றுள்ளார். பரிசு வென்ற சிறுமி அனயா அவர்களுக்கு கரங்கள் உண்டு ஆனால், மணிக்கட்டிற்குக் கீழ், கைகளும், விரல்களும் கிடையாது. இவ்விரு கரங்களின் இடையில் பென்சிலைப் பிடித்து இச்சிறுமி அழகுற எழுதி, இவ்விருதைப் பெற்றார்.

2013ம் ஆண்டு, ஜெஸ்ஸிகா காக்ஸ் (Jessica Cox) என்ற 30 வயது இளம்பெண், தன் கால்களைக் கொண்டு ஒரு விமானத்தை ஓட்டி, பறந்துசென்றார். கரங்கள் இரண்டும் இன்றி பிறந்த ஜெஸ்ஸிகா அவர்கள், கார் ஒட்டுதல், கம்ப்யூட்டரைப் பயன்படுத்துதல், பியானோ வாசித்தல் என்ற அனைத்தையும் தன் இரு கால்களைக் கொண்டு செய்து வருகிறார்.

அங்கக் குறையிருந்தாலும், அகத்தில் நிறைவும் நம்பிக்கையும் கொண்டு சாதித்துள்ள இவ்விரு பெண்களை இன்று எண்ணிப் பார்ப்பதற்கு ஒரு முக்கிய காரணம், இன்று நாம் சிறப்பிக்கும் அன்னை தினம். குறையுடன் பிறந்த இவ்விரு பெண்களையும் சாதனையாளர்களாக மாற்றிய புரட்சியில், இவ்விருவரின் அன்னையருக்கு பெரும் பங்கு இருந்திருக்க வேண்டும் என்பதை யாரும் ஏற்றுக்கொள்வர்.

ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழாவை இன்று கொண்டாடுகிறோம். இதே நாளில், இந்தியா, இலங்கை, உட்பட, 80க்கும் மேற்பட்ட நாடுகளில், அன்னை தினம் கொண்டாடப்படுகிறது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட மே மாத செபக் கருத்து, பெண்களை மையப்படுத்தி அமைந்துள்ளதாலும், இன்று அன்னை தினம் கொண்டாடப்படுவதாலும், பெண்மை, தாய்மை ஆகிய கருத்துக்களில் நம் ஞாயிறு சிந்தனைகளை மேற்கொள்வோம்.

கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக -1912ம் ஆண்டு முதல்- ஒவ்வொர் ஆண்டும், மே 2ம் ஞாயிறன்று, நாம் கொண்டாடும் இந்த நாளை, ‘அன்னை தினம்’ என்று ஒருமையில் அழைப்பதா? ‘அன்னையர் தினம்’ என்று பன்மையில் அழைப்பதா? என்ற கேள்வி எழலாம். அமெரிக்காவில், இத்தினத்தை, அதிகாரப் பூர்வமான ஒரு நாளாக உருவாக்க, பல வழிகளிலும் பாடுபட்ட, Anna Jarvis என்பவர், இக்கேள்விக்குச் சரியான விடை அளிக்கிறார்:

"இது அன்னை தினம்தான். அன்னையர் தினம் அல்ல. நம் ஒவ்வொருவரின் அன்னையைத் தனிப்பட்ட வகையில் சிந்தித்து, அவருக்கு நாம் செலுத்தும் காணிக்கை, இந்த நாள். ‘அன்னையர்’ என்ற பன்மை வடிவம் கொடுத்து, முகமற்ற ஒரு கருத்தைக் கொண்டாடும் நாள் இதுவல்ல" என்று அவர் ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.

அம்மாவை, அன்னையை, தாயை மையப்படுத்திய வழிபாடுகளும், விழாக்களும், பல பழமைக் கலாச்சாரங்களில், மதிப்புடன் கொண்டாடப்பட்டு வந்துள்ளன. அன்னைக்கென வருடத்தின் ஒரு நாளை அர்ப்பணிக்கும் எண்ணம், 19ம் நூற்றாண்டில் ஆரம்பமானது. சமூக ஆர்வலரும், கவிஞருமான Julia Ward Howe அவர்கள், 1870ம் ஆண்டு, சக்திவாய்ந்த ஒரு கவிதையை எழுதினார். "அன்னைதின அறைகூவல்" (Mother's Day Proclamation) என்ற பெயரில் வெளியான அக்கவிதை, உலகெங்கும், அன்னை தினத்தைக் கொண்டாடுவதற்கு வித்திட்டது. அக்கவிதை விவரிக்கும் பெண்மை, தாய்மை ஆகியப் பண்புகள், நமது இன்றைய உலகிற்கு மிகவும் தேவையான பாடங்களைச் சொல்லித் தருகின்றன. இதோ, அக்கவிதை:

மகளிரே, இன்று எழுந்து நில்லுங்கள்! இதயமுள்ள மகளிரே எதிர்த்து நில்லுங்கள்!

உங்களது திருமுழுக்கு, தண்ணீரால் நடந்திருந்தாலும், கண்ணீரால் நடந்திருந்தாலும் சரி... இப்போது எழுந்து நில்லுங்கள், எதிர்த்து நில்லுங்கள்.

உறுதியாகச் சொல்லுங்கள்: “வாழ்வின் மிக முக்கியக் கேள்விகளின் விடைகளைத் தீர்மானிக்கும் உரிமையை குடும்பத்துடன் சிறிதும் தொடர்பற்ற நிறுவனங்களுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம்.

சண்டைகளில் உயிர்களைக் கொன்று குவித்த கொலை நாற்றத்துடன் வீடு திரும்பும் கணவர்கள் எங்கள் ஆரவார வரவேற்பையும், அரவணைப்பையும் பெறுவதற்கு நாங்கள் இணங்கமாட்டோம்.

பிறரன்பு, கருணை, பொறுமை என்று நாங்கள் சொல்லித்தரும் பாடங்களை மாற்றி, அவற்றிற்கு எதிரான பாடங்களைச் சொல்லித்தரும் நிறுவனங்களிடம் எங்கள் குழந்தைகளை ஒப்படைக்க மாட்டோம்.

ஒரு நாட்டைச் சார்ந்த பெண்களாகிய நாங்கள், மற்றொரு நாட்டைச் சார்ந்த பெண்கள் மீது கனிவு கொண்டவர்கள். எனவே, எங்கள் மகன்கள், அப்பெண்களின் மகன்களைக் காயப்படுத்த விடமாட்டோம்.”

நிர்மூலமாக்கப்பட்ட இந்தப் பூமியின் அடிவயிற்றிலிருந்து எழும் ஓர் ஓலம், எங்கள் குரல்களுடன் இணைகிறது. அது சொல்வது இதுதான்: "ஆயுதங்களைக் களையுங்கள்! ஆயுதங்களைக் களையுங்கள்! உயிர் குடிக்கும் வாள் ஒருநாளும் நீதியை நிலைநாட்டும் தராசு ஆகாது!" என்பதே பூமியின் அடிவயிற்றிலிருந்து எழும் அந்த ஓலம்.

போர்க்கள அழைப்பைக் கேட்டு, தங்கள் நிலங்களையும், தொழிற்சாலைகளையும் விட்டுச் சென்றுள்ள ஆண்களைப் போல், பெண்களும் தங்கள் இல்லங்களை விட்டு வெளியேறட்டும். போரில் ஈடுபடும் ஒவ்வொரு நாட்டிலும் நல்ல முடிவுகள் உருவாக, பெண்களும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறட்டும். போரில் இறந்தோரை நினைவுகூர, அவர்களுக்காக அழுது புலம்ப, பெண்கள் ஒன்று சேரட்டும். இந்த மனிதக் குடும்பம் அமைதியில் வாழ்வதற்குரிய வழிமுறைகளைப் பெண்கள் கலந்து பேசட்டும்.

உலகின்மேல், சீசரின் உருவத்தைப் பதிக்காமல், கடவுளின் உருவத்தைப் பதிப்பது எவ்விதம் என்பதை பெண்கள் இவ்வுலகிற்குச் சொல்லித் தரட்டும்.

அமெரிக்காவின் உள்நாட்டுப் போர் நடந்த காலத்தில் Julia Ward அவர்கள் எழுதிய கவிதை வரிகள், இன்றும் நம்மைச் சூழ்ந்துள்ள அவலங்களை நினைவுறுத்துகின்றன.

அன்னை தினத்திற்குக் கூறப்படும் மற்றொரு பின்னணியும் நம் கவனத்தை ஈர்க்கின்றது. இங்கிலாந்தில், 'Mothering Sunday' என்ற பழக்கம் 16ம் நூற்றாண்டிலேயே இருந்தது. 16ம் நூற்றாண்டில், இங்கிலாந்தில், பல செல்வந்தர்களின் இல்லங்களில், பெண்கள், இரவும் பகலும் பணி செய்து வந்தனர். தங்கள் இல்லங்களுக்குச் சென்று தங்கள் குழந்தைகளின் தேவைகளை நிறைவு செய்யும் விடுமுறை நாள் அவர்களுக்குக் கிடையாது. எனவே, மே மாதத்தின் ஒரு ஞாயிறன்று, இந்தப் பணிப்பெண்கள், தங்கள் குடும்பங்களுக்குச் சென்று, தங்கள் குழந்தைகளுடன் அந்த நாளைச் செலவிட, விடுமுறை வழங்கப்பட்டது. அந்த நாளுக்கு 'Mothering Sunday', அதாவது, 'அன்னையாகும் ஞாயிறு' என்றும் பெயர் சூட்டப்பட்டது.

16ம் நூற்றாண்டில் நிலவிய அச்சூழல், மனதை உறுத்துகிறது. செல்வந்தர் இல்லங்களில், ஆண்டு முழுவதும் துன்பப்படும் பெண்களுக்கு, ஒரு ஞாயிறை விடுமுறையாகத் தந்து, அதை, 'அன்னையாகும் ஞாயிறு' என்று அழைத்ததை, அநீதி என்று மனம் சொல்கிறது. 16ம் நூற்றாண்டில் நிலவிய அதே நிலை, இன்றும் தொடர்வதை நாம் அறிவோம். வறுமையின் காரணமாக, குடும்பங்களையும், குழந்தைகளையும் பிரிந்து வேறு இல்லங்களில், வேற்று நாடுகளில் பணி செய்யும் பல கோடி அன்னையருக்காக சிறப்பான வேண்டுதல்களை எழுப்புவோம்.

பெண்களையும், அன்னையரையும் மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள மே மாத செப கருத்து, நாம் மேற்கொண்டுள்ள சிந்தனைகளுக்குத் துணைவருகிறது. 'பெண்களுக்கு மரியாதை' என்ற தலைப்பில், திருத்தந்தை வெளியிட்டுள்ள காணொளித் தொகுப்பில், தன் செபக் கருத்துடன் நம்மையும் இணையச் சொல்லி அழைப்பு விடுத்துள்ளார். இக்காணொளித் தொகுப்பின் துவக்கத்தில், அறிவியல் ஆய்வாளராக, மருத்துவராக, இல்லத்தில் தன் குழந்தைக்கு உதவும் அன்னையாக, அருள் சகோதரியாக பணியாற்றும் பெண்கள் திரையில் தோன்றுகின்றனர். அவ்வேளையில், திருத்தந்தையின் குரல், பின்னணியில் ஒலிக்கிறது:

"குடும்பத்தில் துவங்கி, அனைத்துத் துறைகளிலும், பெண்களின் பங்களிப்பு மறுக்கமுடியாத உண்மை. இதை நாம் உணர்ந்தால் மட்டும் போதுமா?" என்ற கேள்வியுடன், திருத்தந்தையின் சிந்தனைகள் துவங்குகின்றன.

இதைத் தொடர்ந்து, இக்காணொளித் தொகுப்பில், ஒரு குடும்பத்தலைவி, சமையலறையில் வேலை செய்வது, தரையைக் கழுவி சுத்தம் செய்யும் பெண், தொழிற்சாலையில் பணியாற்றும் பெண், பூங்காவில் அமர்ந்திருக்கும் ஆணும், பெண்ணும், வகுப்பறையில் கற்றுத் தரும் ஆசிரியர் என்ற பல காட்சிகளுடன், திரையில் பல சொற்றொடர்களும் தோன்றி மறைகின்றன. "ஆணைப்போலவே நானும் வேலைக்குச் செல்கிறேன்"; "நான் ஒரு போதும் அடிமையாகமாட்டேன்"; "பாலின வன்முறை வேண்டாம்"; "பணியிடங்களில் நிலவும் பாகுபாடுகள் போதும்"; "ஆணும், பெண்ணும் ஆண்டவனின் குழந்தைகள்" ஆகிய சொற்றொடர்கள் திரையில் தோன்றி மறைகின்றன. இக்காட்சிகளின்போது, திருத்தந்தையின் குரல் பின்னணியில் இவ்வாறு ஒலிக்கிறது:

"மிகக் கடினமானச் சூழல்களில், அடிமைப்படுத்தப்பட்டு, ஒதுக்கப்பட்டுள்ள பெண்களுக்கு நாம் எதுவும் செய்யவில்லை. பெண்களுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்கொடுமைகளைக் கண்டனம் செய்யவேண்டும். சமுதாயத்தில் தடையாக உள்ள அனைத்தையும் நீக்கி, அரசியல், பொருளாதாரம், என்ற அனைத்து நிலைகளிலும், பெண்களை, முழுமையாக இணைக்க வேண்டும்.

இக்கருத்து சரியென்று நீங்கள் உணர்ந்தால், என் மன்றாட்டுடன் நீங்களும் இணையுங்கள். உலகின் அனைத்து நாடுகளிலும், பெண்கள் மனித சமுதாயத்திற்கு வழங்கும் பங்களிப்பிற்காக, அவர்கள் மதிக்கப்பெற்று, போற்றப்பட வேண்டும் என்பதே, என் மன்றாட்டு" என்று திருத்தந்தை தன் மே மாத செபக் கருத்தை விளக்கிக் கூறியுள்ளார்.

Julia Ward Howe அவர்கள் எழுதிய "அன்னைதின அறைகூவல்" என்ற கவிதை, அன்னை தினம் என்ற எண்ணத்திற்கு வித்திட்டது. அக்கவிதையின் இறுதி வரிகள் இன்று நாம் கொண்டாடி மகிழும் அன்னை தினத்தையும், மே 13, வருகிற வெள்ளியன்று நாம் கொண்டாடவிருக்கும் பாத்திமா அன்னை திருநாளையும் இணைக்க உதவியாக உள்ளன.

உலகின்மேல், சீசரின் உருவத்தைப் பதிக்காமல், கடவுளின் உருவத்தைப் பதிப்பது எவ்விதம் என்பதை பெண்கள் இவ்வுலகிற்குச் சொல்லித் தரட்டும்.

ஆணவம் நிறைந்த சீசரின் உருவம் பதியப் பதிய, போர்களாலும், வன்முறைகளாலும், வர்த்தக நிறுவனங்களின் பேராசை வெறியாலும் இவ்வுலகம் சிதைந்து வருகிறது என்பதை நன்கு அறிவோம். சீசரின் உருவைப் பதிப்பதற்குப் பதிலாக, இரக்கமே உருவான கடவுளின் உருவைப் பதிப்பது எப்படி என்பதை அன்னை மரியா தான் வாழ்ந்த காலத்தில் மட்டும் சொல்லித் தரவில்லை. அவர் விண்ணகம் சென்றபின்பும், பல இடங்களில் தோன்றி, இச்செய்தியைப் பகிர்ந்தார். 100 ஆண்டுகளுக்கு முன் -1917ம் ஆண்டு மே 13ம் தேதி முதல்- பாத்திமா நகரில் அவர் தோன்றிய பல வேளைகளில், உலகைச் சூழ்ந்திருந்த போரைக் குறித்தும், உலக அமைதிக்காக மக்கள் செபங்களை எழுப்ப வேண்டும் என்பது குறித்தும் சிறப்பான செய்திகளைக் கூறினார்.

போர்களால், போராட்டங்களால், பேராசைகளால் தொடர்ந்து காயப்பட்டு வரும் நமது உலகிற்கு, தாய்மை, பெண்மை ஆகிய குணமளிக்கும் குணங்கள் அதிகம் தேவைப்படுகின்றன. இன்று நாம் கொண்டாடும் அன்னை தினம், வாழ்த்து அட்டைகள், மலர் கொத்துக்கள் என்று வெறும் வியாபாரத் திருநாளாக மாறிவிடாமல், நம் ஒவ்வொருவரிலும் உள்ள தாய்மையை வெளிப்படுத்தும் ஒரு நாளாக, அதன் வழியாக உலகில் நீதியும், அதன் அடிப்படையில் அமைதியும் வளர்வதற்கு உறுதியான அடித்தளமிடும் ஒரு நாளாக இருக்க வேண்டுமென்று சிறப்பாக வேண்டிக்கொள்வோம்.

அன்னை மரியாவுக்கென அர்ப்பணிக்கப்பட்ட மே மாதத்தில், உலகின் அனைத்து நாடுகளிலும், பெண்கள் மனித சமுதாயத்திற்கு வழங்கும் பங்களிப்பிற்காக, அவர்கள் மதிக்கப்பெற்று, போற்றப்பட வேண்டும் என்று மன்றாடும் திருத்தந்தையுடன் நாமும் இணைந்து செபிப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.