2016-05-02 16:07:00

ஏழை மக்களுக்கு உதவ, வெனிசுவேலா ஆயர்களின் விண்ணப்பம்


மே,02,2016. மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துவரும் வெனிசுவேலா நாட்டின் ஏழை மக்களுக்கு உதவும் நோக்கத்தில், உணவுப் பொருள்களையும், மருந்துகளையும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளனர், அந்நாட்டு ஆயர்கள்.

முன் எப்போதும் இல்லாத அளவு, தற்போது வெனிசுவேலாவில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன், இலஞ்சம், ஊழல், கொலைகள் போன்ற ஆபத்துக்களும் பெருகியுள்ளன என்று ஆயர்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.

இத்தகையச் சூழலில், மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய உதவும் நோக்கத்தில், வெளிநாட்டிலிருந்து பொருள்களைக் கொணர, பல்சமய அமைப்புக்களுக்கு அரசு அனுமதி வழங்கவேண்டும் என்று ஆயர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

பொருள்களின் பற்றாக்குறையை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, பொருள்களைப் பதுக்கி வைத்து, இலாபம் ஈட்ட முயல்வது பெரும் குற்றம், மற்றும் பாவம் என்று ஆயர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.

சமூக வன்முறைகள் வழியே மாற்றங்களைக் கொணரலாம் என்று கூறுபவர்களிடமிருந்தும், அச்சுறுத்தல்கள் வழியே குரல்வளையை நெருக்க முயல்பவர்களிடமிருந்தும் ஒதுங்கியிருப்பதோடு, நம்பிக்கையை இழக்காமல் செயல்படுமாறு பொதுமக்களிடம், வெனிசுவேலா ஆயர்கள் விண்ணப்பித்துள்ளனர். 

ஆதாரம் : CNA / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.