2016-05-02 15:51:00

இறைவார்த்தையை நடைமுறைப்படுத்த தூய ஆவியார் உதவுகிறார்


மே,02,2016. எத்தனை துன்பங்கள், இடற்பாடுகள் வந்தாலும், நாம் தனிமையில் இல்லை, தூய ஆவியாரின் இருப்பின் அடையாளமே, இயேசு தம் திருத்தூதர்களுக்கு வழங்கும் அமைதி என, இஞ்ஞாயிறு நண்பகல் அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நாம் ஒருவர் மற்றவரை சகோதரராக அன்பு கூர்வதைத் தடைச் செய்யும் சுயநலத்திலிருந்து வெற்றி பெறுவதிலிருந்து எழுவதே இயேசுவின் அமைதி எனவும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய ஆவியார் சீடர்களைப் பாதுகாத்து ஊக்கம் வழங்குவதோடு, அவர்களுக்கு கற்பிக்கும் பணியையும், அதாவது இயேசுவின் வார்த்தைகளை அவர்களில் மீண்டும் தூண்டி எழுப்பும் பணியையும் கொண்டுள்ளார்  என உரைத்தார்.

இயேசுவின் வார்த்தைகளைத் தூய ஆவியார் நமக்கு நினைவுபடுத்துவது எதற்கெனில், அவைகளை நாம், நம் வாழ்வின் பல்வேறு சூழல்களில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தூய ஆவியாரின் கொடை வழியாக இயேசுவின் புதிய பிரசன்னம், வரலாற்றில் மீண்டும் இடம்பெறுகிறது என்பதையும் வலியுறுத்திய திருத்தந்தை, இயேசுவைப் போல் நாமும் பிறரன்பில் திகழ தூய ஆவியார் உதவுகிறார் எனவும் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.