2016-04-21 16:26:00

உரோம் த்ரேவி நீர் ஊற்று ஏப்ரல் 29ல் சிவப்பு நிறத்தில்


ஏப்.21,2016. கிறிஸ்தவ விசுவாசத்திற்காக இன்றும் தங்கள் உயிர்களை இழக்கும் எல்லாக் கிறிஸ்தவர்களின் நினைவாக, உரோம் நகரில் சுற்றுலாப் பயணிகள் குவிகின்ற மற்றும் மிக முக்கியமான இடமாகவும் அமைந்துள்ள த்ரேவி நீர் ஊற்று, ஏப்ரல் 29ம் தேதி சிவப்பு நிறத்தில் ஒளிரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்தவர்களுக்கு எதிராக இடம்பெறும் நடவடிக்கைகளில் கிறிஸ்தவர்கள் எதிர்நோக்கும் துன்பங்களை, மக்களின் கவனத்திற்குக் கொண்டுவரும் நோக்கத்தில், Aid to the Church in Need என்ற கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவனம், இந்நிகழ்வை ஏற்பாடு செய்கின்றது.

உலகெங்கிலும் ஒரு தெளிவான மற்றும் நீடித்து நிலைக்கக்கூடிய முடிவுகள் எடுக்கப்படவும், 21ம் நூற்றாண்டில் துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்கள், தங்களின் அடிப்படை உரிமையாகிய சமய சுதந்திரத்தை முழுமையாய் அனுபவிக்க வழியமைக்கவும் இந்நிகழ்வு உதவும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளது Aid to the Church in Need பிறரன்பு நிறுவனம்.

ஏப்ரல் 29ம் தேதி இடம்பெறும் இந்நிகழ்வில், அலெப்போ கல்தேய வழிபாட்டுமுறை கத்தோலிக்கப் பேராயர் அந்துவான் அவ்தோ, Church in Need நிறுவனத்தின் அனைத்துலகத் தலைவர் கர்தினால் மவ்ரோ பியாச்சென்சா போன்றோர் உரை நிகழ்த்துவார்கள்.  

ஆதாரம் : CNA / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.