2016-04-20 16:08:00

சமய நல்லிணக்கத்தை பயங்கரவாதம் அழிக்கின்றது


ஏப்.20,2016. மதத்தின் பெயரால் நடத்தப்படும் பயங்கரவாதம் பொய்யானது, என்று, ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் பெர்னதித்தோ அவுசா அவர்கள் ஐ.நா.வில் கூறினார்.

பன்னாட்டு அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற தலைப்பில், ஐ.நா. பாதுகாப்பு அவை நடத்திய பொது விவாதத்தில் உரையாற்றிய பேராயர் அவுசா அவர்கள், மத்திய கிழக்குப் பகுதியில், முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும், நூற்றாண்டுகளாக நல்லிணக்கத்துடன் வாழ்ந்துவந்த நிலை, அழிக்கப்படுவதற்கு அனுமதிக்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டார்.

மதத்தின் பெயரில் கொலை செய்கிறோம் என்றுரைக்கும் பயங்கரவாதக் குழுக்கள், பொய்யையும், தெய்வநிந்தனையையும் வெளிப்படுத்துகின்றன என்றும், எவ்வளவு கடுமையான சொற்களால் கண்டனம் செய்ய முடியுமோ, அந்த அளவுக்கு அக்குழுக்கள் கண்டனம் செய்யப்பட வேண்டும் என்றும், வன்முறைக்கு, மதத்தை கருவியாகப் பயன்படுத்துபவர்களை, கண்டனம் செய்வதற்கு, சமயத் தலைவர்களுக்கு முக்கிய பொறுப்பு உள்ளது என்றும் பேராயர் கூறினார்.

பயங்கரவாதம், பொதுவான மனித சமுதாயத்திற்கு அடிப்படை அச்சுறுத்தலாக உள்ளது என்றும், இது நாடு கடந்தப் பண்பைக் கொண்டுள்ளது என்றும், ஐ.நா.வின் நூறு உறுப்பு நாடுகளிலிருந்து முப்பதாயிரம் வெளிநாட்டுப் போராளிகள், ஐ.எஸ். அரசின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் நுழைந்துள்ளனர் என்றும் கூறினார் பேராயர் அவுசா.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.