2016-04-18 13:41:00

இரக்கத்தின் காலம்: ஓர் உயிருக்காக, இன்னோர் உயிர் துன்புறுவதா


ஒரு சமயம், ஒரு பெரிய மகானிடம், பெண் ஒருவர் சென்று, ஐயா, நான் விலைமகளாக இருந்து தவறு செய்துவிட்டேன், என் பாவத்திற்குத் தண்டனை கொடுங்கள் என்று வேண்டினார். அந்த மகான் மிகுந்த கருணையோடு, இன்னும் நான்கு மாதங்கள் கழித்து வா என்று சொல்லி அனுப்பினார். அந்தப் பெண்ணும் நான்கு மாதங்கள் கழித்துச் சென்றார். இப்போது உன் நிலைமை என்ன? என்று கேட்டார் அவர். ஐயா, நான் தாய்மை அடைந்திருக்கிறேன் என்று அப்பெண் சொன்னதும், அப்படியா, நீ, குழந்தை பெற்ற பிறகு என்னை வந்து பார் என்றார் மகான். அந்தப் பெண்ணும் குழந்தை பெற்ற பிறகு சென்று பார்த்தார். ஒரு குழந்தை தன் தாயிடத்தில் இரண்டு ஆண்டு காலம் பால் குடிக்கக் கடமைப்பட்டது, எனவே, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு என்னை வந்து பார் என்று சொல்லியனுப்பினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்தத் தாய்க்கு உரிய தண்டனையைச் சொன்னாராம் அந்த மகான். அப்பெண் தவறுக்குத் தண்டனைக்கு உரியவரே என்றாலும், அந்தப் பெண்ணின் குழந்தை எவ்வகையிலும் தண்டனைக்குரியது அல்ல, குழந்தை பாதிக்கப்படக் கூடாது என்பதில் அந்த மகான் கவனமாக இருந்தார். ஆம். ஓர் உயிருக்காக, இன்னோர் உயிர் துன்புறக் கூடாது. பிற உயிர்களை மதிக்கவும், அன்புகூரவும் தெரிந்தவர்களே மனிதர்கள் எனப்படுபவர்கள். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.