2016-04-15 15:00:00

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு வயது 89


ஏப்.15,2016. மூன்றாண்டுகளுக்கு முன்னர் தனது பாப்பிறைப் பணியிலிருந்து விலகிய, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், ஏப்ரல் 16, இச்சனிக்கிழமையன்று தனது 89வது வயதைச் சிறப்பிக்கிறார்.

உரோம் ஆயர் பணியிலிருந்து முழு சுதந்திரத்துடன் விலகுவதாக  அறிவித்து, பணி ஓய்வு பெற்று, தற்போது வத்திக்கானில் வாழ்ந்து வரும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், அதன் பின்னர் பொது நிகழ்வுகளில் அரிதாகவே கலந்து கொள்கிறார்.

கடந்த டிசம்பர் 8ம் தேதி, இரக்கத்தின் யூபிலி ஆண்டு புனிதக் கதவு திறக்கும் நிகழ்வில்  கடைசியாக கலந்து கொண்டுள்ள திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், புதிய திருத்தந்தைக்கு உதவுவதே தனது ஒரே பணி என்றும் கூறியிருக்கிறார்.

திருஅவைக்கு அறிவார்ந்த பலவற்றை அளித்துள்ளதுடன், தனது பணியிலிருந்து ஓய்வுபெறும் தீர்மானத்தினால், தாழ்மையும், மனிதமும் நிறைந்த அழகான பாடத்தை நமக்கெல்லாம் அளித்துள்ளார்.

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் தொடங்கியுள்ள ஜோசப் இராட்சிங்கர் நிறுவனம் என்ற முகநூலின் வழியாக, அவரது அண்மைத் தனிப்பட்ட சந்திப்புகள் குறித்த புகைப்படங்களைப் பார்க்க முடிகின்றது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.