2016-04-12 15:46:00

மரண தண்டனை இரத்து செய்யப்படுமாறு திருத்தந்தை கோரிக்கை


ஏப்.12,2016.  மரண தண்டனை இரத்து செய்யப்படுமாறும், விசுவாசத்தின் பயனாக, கிறிஸ்தவர்கள் அறிவிப்பதை, நன்மனம் கொண்ட அனைவரும் ஏற்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உலகில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கு முயற்சிக்கும் அனைத்துலக பாக்ஸ் கிறிஸ்டி கத்தோலிக்க அமைப்பு, திருப்பீட நீதி, அமைதி அவையின் ஒத்துழைப்புடன் உரோம் நகரில் இத்திங்களன்று தொடங்கியுள்ள மூன்று நாள் கருத்தரங்கிற்குச் செய்தி அனுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

திருப்பீட நீதி, அமைதி அவைத் தலைவர் கர்தினால் டர்க்சன் அவர்களுக்கு இச்செய்தியை அனுப்பியுள்ள திருத்தந்தை, நம்முடன் வாழ்வோரை, சகோதர சகோதரிகளாக நோக்குவதால் மட்டுமே, மனித சமுதாயத்தால் போர்களையும், மோதல்களையும் முடிவுக்குக் கொண்டுவர இயலும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

“வன்முறையின்மையும் நீதியுடன்கூடிய அமைதியும் : வன்முறையற்ற நிலையை, கத்தோலிக்க முறையில் புரிந்துகொள்தலும், அர்ப்பணமும்” என்ற தலைப்பில் இக்கருத்தரங்கு நடைபெற்று வருகிறது.   

மேலும், இக்கருத்தரங்கில் தொடக்கவுரையாற்றிய கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், திருத்தந்தையின் இச்செய்தியை முதலில் வாசித்து, பின்னர் தனது உரையை வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.