2016-04-08 15:31:00

குடும்பங்களின் அன்பின் மகிழ்வு, திருஅவையின் மகிழ்வு


ஏப்.08,2016. "குடும்பங்கள் அனுபவிக்கும் அன்பின் மகிழ்வு, திருஅவையின் மகிழ்வும் ஆகும்" என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக இவ்வெள்ளியன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய ஒன்பது மொழிகளில், @Pontifex  என்ற முகவரியில், வெளியிடப்படும் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி, இவ்வெள்ளியன்று, குடும்பத்தில் அன்பு பற்றிய, அவரின் திருத்தூது அறிவுரை மடலை மையப்படுத்தியுள்ளது.

மேலும், நவீன அடிமைத்தனமும், மனித வர்த்தகமும் என்ற தலைப்பில், இவ்வியாழனன்று நடைபெற்ற ஐ.நா. கருத்தரங்கிற்கு, ஐ.நா.வுக்கான திருப்பீடத் தூதர் பேராயர் பெர்னதித்தோ அவுசா வழியாக, செய்தி அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

இக்காலத்தில் உலகெங்கும், ஓர் அவமானமாகத் தொடர்ந்து இடம்பெற்றுவரும் நவீன அடிமைத்தனம் மற்றும் மனித வர்த்தகத்தில் சிக்குண்டுள்ள எண்ணற்ற மனிதரின் துயர் துடைப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகளுக்கு மேலும் ஒத்துழைப்பு வழங்கப்படுமாறு கேட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மனித சமுதாயத்திற்கெதிரான இக்குற்றத்தை ஒழிப்பதற்கு, ஐ.நா. உறுப்பு நாடுகளும், பல்வேறு அரசு, தன்னார்வ மற்றும் சமய நிறுவனங்கள் எடுத்துவரும் முயற்சிகளை ஊக்குவிப்பதாகவும் திருத்தந்தையின் செய்தி கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.