2016-04-04 17:04:00

திருத்தந்தை: நிலக்கண்ணி வெடிகள் முற்றிலும் அகற்றப்படவேண்டும்


ஏப்ரல்,04,2016. நிலக்கண்ணி வெடிகளால் உலகில் மிக அதிக அளவில் மக்கள் கொல்லப்படுவது, மற்றும் உறுப்புக்களை இழப்பது ஆகிய கொடுமைகள் தொடர்கின்றன என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையின் இறுதியில் கூறினார்.

ஏப்ரல் 4, இத்திங்களன்று, நிலக்கண்ணி வெடிகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் அவற்றை நீக்கும் உலக நாள் கடைபிடிக்கப்படுவதையொட்டி திருத்தந்தை இந்த அழைப்பை விடுத்தார்.

மேலும், தங்கள் உயிரைப் பணயம் வைத்து, நிலக்கண்ணி வெடிகளை நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பல பணியாளர்களை தான் அன்புடன் நினைவுகூர்வதாகவும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.

நிலக்கண்ணி வெடிகள் முற்றிலும் அகற்றப்பட்ட, பாதுகாப்பான ஓர் உலகைப் படைக்க, அனைவரும் நம்மையே அர்ப்பணிப்போம் என்ற வேண்டுதலுடன், திருத்தந்தை, ஞாயிறு அல்லேலூயா மூவேளை செப உரையின் இறுதியில் வழங்கிய, சிறப்பு விண்ணப்பத்தை நிறைவு செய்தார்.

மேலும், "இறைவனையும், மனிதரையும் இணைக்கும் பாலம், இரக்கம்; நாம் பாவம் நிறைந்தவர்கள் என்ற நிலையைத் தாண்டி, நாம் அன்பு கூரப்படுகிறோம் என்ற நம்பிக்கை நம் உள்ளங்களைத் திறக்கிறது" என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட டுவிட்டர் செய்தியாக, இஞ்ஞாயிறன்று வெளியாயின.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.