2016-04-02 15:28:00

இந்தியா- கடத்தப்பட்டுள்ள சலேசிய அருள்பணியாளர்க்காகச் செபம்


ஏப்.02,2016. கடந்த மார்ச் 4ம் தேதியிலிருந்து ஐ.எஸ். இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவிடம் பிணையல் கைதியாக இருக்கும் சலேசிய அருள்பணியாளர் Tom Uzhunnalil அவர்களின் விடுதலைக்காக, இறை இரக்க ஆண்டவரிடம் சிறப்பாகச் செபிக்குமாறு, இந்தியக் கத்தோலிக்கரைக் கேட்டுக்கொண்டுள்ளார் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்.

ஏமன் நாட்டின் ஏடன் நகரில், பிறரன்பு மறைப்பணியாளர் சபை நடத்திய வயதானவர் இல்லத்தைத் துப்பாக்கிச்சூட்டால் தாக்கி, அச்சபையின் நான்கு அருள்சகோதரிகளைக் கொலை செய்த பின்னர், 56 வயது நிரம்பிய அருள்பணியாளர் Uzhunnalil அவர்களையும் கடத்திச் சென்றுள்ளனர் இஸ்லாம் தீவிரவாதிகள்.

இறை இரக்க ஆண்டவருக்குச் சிறப்பாக அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்நாள்களில், இந்த அருள்பணியாளரின் விடுதலைக்காக உருக்கமாகச் செபிக்குமாறு, இந்தியக் கிறிஸ்தவர்கள் அனைவரையும் கேட்டுள்ள மும்பைப் பேராயர் கர்தினால் கிரேசியஸ் அவர்கள், அருள்பணியாளர் Uzhunnalil அவர்களின் விடுதலைக்காகத் துரித நடவடிக்கையில் ஈடுபடுமாறு, இந்திய அரசையும் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே, அருள்பணியாளர் Uzhunnalil அவர்கள் குறித்த விபரங்கள், இதுவரை எதுவும் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

ஆதாரம் : Asianews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.