2016-03-31 14:40:00

திருத்தந்தை:அன்னை அஞ்செலிக்கா விண்ணகத்தில் இருக்கிறார்


மார்ச்,31,2016. அருள்சகோதரியான அன்னை அஞ்செலிக்கா அவர்கள், விண்ணகத்தில் இருக்கிறார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று வழங்கிய மறைக்கல்வி உரைக்குப் பின், EWTN தொலைக் காட்சி நிறுவனத்தின் பணியாளர்களிடம் கூறினார்.

Eternal Word Television Network (EWTN) என்ற உலகளாவிய தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றை நிறுவிய அன்னை அஞ்செலிக்கா அவர்கள், மார்ச் 27, உயிர்ப்பு ஞாயிறன்று தன் 92வது வயதில் இறையடி சேர்ந்தார்.

அவரது உருவம் பதிந்த ஒரு படத்தை, திருத்தந்தை ஆசீர்வதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், இப்புதனன்று புனித பேதுரு வளாகத்திற்கு வந்திருந்த EWTN நிறுவனத்தின் ஊழியர்களிடம் மறைந்த அன்னை அஞ்செலிக்கா அவர்களின் புனிதத்துவத்தைப் பற்றி திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

மேலும், அன்னை அஞ்செலிக்கா அவர்கள் இறையடி சேர்ந்ததைக் குறிப்பிட்டுப் பேசிய, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனெடிக்ட் அவர்கள், உயிர்ப்புப் பெருவிழாவன்று அவர் இவ்வுலகைவிட்டுச் சென்றதை இறைவன் அவருக்கு வழங்கிய ஒரு கொடையாகக் காணலாம் என்று கூறினார் என, முன்னாள் திருத்தந்தையின் தனிப்பட்டச் செயலர் பேராயர், Georg Ganswein அவர்கள், CNA செய்தியிடம் கூறினார்.

"இறைவனின் இரக்கத்தை வரவேற்க நம் உள்ளங்களைத் திறந்தால், நாம் மன்னிப்பை வழங்கும் சக்தி பெறுவோம்" என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியாக அமைந்தன.

ஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.