2016-03-30 15:55:00

சிரியா-புலம் பெயர்ந்தவர்களுக்கு கொரிய காரித்தாஸ் உதவி


மார்ச்,30,2016. சிரியா நாட்டுப் புலம் பெயர்ந்த மக்களுக்கு உதவுவதற்கென, கொரிய காரித்தாஸ் நிறுவனம், 2012ம் ஆண்டிலிருந்து 11 இலட்சம் டாலரைக் கொடுத்துள்ளது.

சிரியாவிலிருந்து புலம் பெயரும் மக்களுக்கு உதவுவதற்கு, “சிரியாவில் உள்நாட்டுச் சண்டை தொடங்கி ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் : அம்மக்களின் கண்ணீரைத் துடைப்போம்” என்ற தலைப்பில், கொரிய கத்தோலிக்க வார இதழுடன் இணைந்து, கொரிய காரித்தாஸ் நிறுவனம் நிதி திரட்டி வருகிறது.  

இந்நடவடிக்கையின் ஒரு கட்டமாக, The Catholic Times என்ற வார இதழ், சிரியாவிலிருந்து புலம் பெயர்ந்த மக்களின் நிலை குறித்த கதைகளை வெளியிட்டு வருகிறது.

சிரியாவில், 2011ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி உள்நாட்டுச் சண்டை தொடங்கியது. இவ்வன்முறைக்கு அஞ்சி, அந்நாட்டின் 2 கோடியே 30 இலட்சம் பேரில், ஏறக்குறைய பாதிப்பேர் சிரியாவிலிருந்து வெளியேறியுள்ளனர்.  

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.