2016-03-27 14:42:00

திருத்தந்தை வழங்கிய ‘ஊர்பி எத் ஓர்பி’ செய்தி


மார்ச்,27,2016. இஞ்ஞாயிறு காலை, உயிர்ப்புப் பெருவிழா திருப்பலியை நிறைவுசெய்து, பகல் 12 மணிக்கு, வத்திக்கான் பசிலிக்காவின் மேல்மாடத்தின் நடுப்பகுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரு கர்தினால்களுடன் தோன்றி, ஊர்பி எத் ஓர்பி என்ற, உரோம் நகருக்கும், உலகுக்குமான செய்தியை வழங்கினார்.  

“ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர். என்றும் உள்ளது அவரது பேரன்பு” (தி.பா.136,1) என்ற திருப்பா வசனத்துடன் ஊர்பி எத் ஓர்பி செய்தியைத் தொடங்கி, அன்புச் சகோதர சகோதரிகளே, உங்களுக்கு கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழா நல்வாழ்த்துக்கள் என்று சொல்லி, தனது செய்தியைத் தொடர்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இறைவனின் இரக்கத்தின் மனித உருவான இயேசு கிறிஸ்து, நம்மீது வைத்துள்ள அன்பினால், சிலுவையில் மரித்தார். நம்மீது கொண்டுள்ள அன்பினால், இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். இதனாலே, இயேசு, ஆண்டவர் என்று இன்று நாம் அறிக்கையிடுகிறோம். இறைவனின் இரக்கம் என்றென்றும் உள்ளது, அது ஒருபோதும் இறப்பதில்லை என்ற திருப்பாடல் இறைவாக்கு, இயேசுவின் உயிர்ப்பில் நிறைவுறுகின்றது. நாம் அவரை முழுமையாக நம்பலாம். நாம் அவருக்கு நன்றி செலுத்துகிறோம். ஏனெனில், அவர் நமக்காக, பாதாளத்தின் ஆழத்திற்குச் சென்றார். மனித குலத்தின் ஆன்மீக மற்றும் அறநெறிப் படுகுழிகளுக்கு முன்னர், வெறுப்பையும் மரணத்தையும் இதயங்களில் தூண்டுகின்ற பாழ்வெளிகளுக்கு முன்னர், எல்லையற்ற இரக்கமே நமக்கு மீட்பைக் கொண்டு வரும். இறைவன் மட்டுமே, இந்தப் பாதாளங்களில் நாம் வீழ்ந்து விடாமல் தடுத்து, தம் அன்பால் அவற்றை நிரப்ப முடியும். சுதந்திரம் மற்றும் வாழ்வின் நிலம் நோக்கிய நம் பாதையில் தொடர்ந்து செல்வதற்கு நமக்கு உதவ முடியும்.

சிலுவையில் அறையுண்ட இயேசு இங்கே இல்லை, அவர் உயிருடன் எழுப்பப்பட்டார் (காண்க. மத். 28,5-6) என்ற மகிமையான உயிர்ப்புச் செய்தி, மரணத்தின் பிடியிலிருந்தும், அழுகை, துன்பம், வேதனை ஆகியவற்றிலிருந்தும் நாம் கடந்து விட்டோம் என்ற ஆறுதல் தரும் உறுதியை அளிக்கின்றது. தம் சீடர்கள் கைவிட்டுவிட்டதாலும், அநியாயமான தீர்ப்பின் சுமையாலும், இழிவான மரணத்தின் வெட்கத்தாலும் துன்புற்ற ஆண்டவர், இப்போது தம் அழியா வாழ்வின் பங்குதாரர்களாக நம்மை ஆக்குகிறார். பசித்திருப்பவர், தாகமாயிருப்பவர், அந்நியர், கைதிகள், ஓரங்கட்டப்பட்டவர், தாழ்த்தப்பட்டவர், அடக்குமுறை, வன்முறைக்குப் பலியாகுபவர் ஆகியோரை, அவரின் கண்களால் அன்போடும், பரிவோடும் நாம் பார்ப்பதற்கு உதவுகிறார். இந்த நம் உலகம், உடலிலும், ஆவியிலும் துன்புறும் மக்களால் நிறைந்துள்ளது. அன்றாடச் செய்திகளும் கொடும் குற்றங்கள் நிறைந்த கதைகளால் முழுவதும் நிறைந்துள்ளன. இவை, அடிக்கடி வீடுகளிலும், மக்கள் அனைவருக்கும் விவரிக்க முடியாத துன்பங்களை ஏற்படுத்தும் பெருமளவில் ஆயுதம் ஏந்திய சண்டைகளிலும் இடம்பெறுகின்றன.

உயிர்த்த கிறிஸ்து, அன்புக்குரிய சிரியா நாட்டுக்கு நம்பிக்கையின் பாதையைக் காட்டுகின்றார். இந்நாடு, நீண்டகாலச் சண்டையாலும், அழிவு, மரணம், அவமதிக்கப்பட்ட மனிதாபிமானச் சட்டம் மற்றும் அமைதி ஒப்பந்தம் முறிவுபட்ட சோகத்தாலும்     பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்நாடு குறித்து இடம்பெற்றுவரும் அமைதிப் பேச்சுவார்த்தைகள், அமைதியிலும், அனைவரின் நன்மனமும், ஒத்துழைப்பும் அமைதியைக் கொணர நல்ல பலன்களைத் தருவதற்கும், ஒவ்வொரு குடிமகனின் மாண்பும் உரிமைகளும் மதிக்கப்படும் உடன்பிறப்பு உணர்வு மிக்க சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் பணிகளைத் தொடங்கவும், உயிர்த்த ஆண்டவரின் வல்லமையில் அர்ப்பணிப்போம். கல்லறை வாயிலில் புரட்டப்பட்ட கல் அருகே நின்ற வானதூதர்   அறிவித்த வாழ்வின் செய்தி, மத்திய தரைக்கடல் பகுதி, மத்திய கிழக்கு, குறிப்பாக, ஈராக், ஏமன் மற்றும் லிபியா நாடுகளில் கடின இதயங்களை மாற்றி, கலாச்சாரங்கள் மற்றும் மக்களின் பலனுள்ள சந்திப்பை ஊக்குவிக்கட்டும். கிறிஸ்துவின் திருமுகத்தில் ஒளிரும் புதிய மனிதரின் உருவம், புனித பூமியில் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனாவுக்கும் இடையே சாதகமான ஒப்பந்தத்தைக் கொண்டுவரட்டும். நேரடியான மற்றும் உண்மையான பேச்சுவார்த்தைகள் வழியாக, நீதி மற்றும் நிலையான அமைதிக்கு அடித்தளங்களை அமைக்க, பொறுமை, திறந்த மனம் மற்றும் அன்றாட அர்ப்பணத்திற்கு வழி அமைப்பதாக. வாழ்வின் ஆண்டவர், உக்ரேய்னில் இடம்பெறும் சண்டை முடிவுபெறுவதற்கு முடிவான தீர்வை எட்டும் முயற்சிகளுக்குத் துணை நிற்பாராக. கைது செய்யப்பட்டுள்ளவர்கள் விடுதலை பெறுவது உட்பட, மனிதாபிமான உதவிகள் சென்றடைய உறுதியான முயற்சிகள் எடுக்கப்பட உள்ளங்களைத் தூண்டுவாராக.

நமக்கு அமைதி அருளும் இயேசு ஆண்டவர், தம் உயிர்த்தெழுதலால் தீமையையும், பாவத்தையும் வெற்றி கண்டார். பெல்ஜியம், துருக்கி, நைஜீரியா, சாட் (Chad), காமரூன், ஐவரி கோஸ்ட் ஆகிய நாடுகளில் இடம்பெற்ற அண்மைத் தாக்குதல்கள் போன்று, உலகின் பல்வேறு பாகங்களில் தொடர்ந்து இடம்பெறும் இரத்தம் சிந்தும், கண்மூடித்தனமான கொடும் வன்முறையின் வடிவமான பயங்கரவாதத்திற்குப் பலியாகுபவரிடம் இந்த உயிர்ப்புப் பெருவிழா நெருக்கமாக நம்மை இட்டுச் செல்லட்டும். ஆப்ரிக்காவில் அமைதி நிலவுவதற்கு, உயிர்த்த ஆண்டவர், நம்பிக்கை மற்றும் வளமை விதைகளைத் தெளிப்பாராக. அரசியல் மற்றும் சமூகப் பதட்டநிலைகளால் நிறைந்துள்ள புருண்டி, மொசாம்பிக், காங்கோ சனநாயகக் குடியரசு, தென் சூடான் ஆகிய நாடுகளைச் சிறப்பாக நினைத்துப் பார்க்கின்றேன்.

இறைவன், அன்பின் ஆயுதங்களால், தன்னலத்தையும், மரணத்தையும் தோற்கடித்தார். அவரின் திருமகன் இயேசு, இரக்கத்தின் கதவை நம் எல்லாருக்கும் அகலத் திறந்துள்ளார். இக்கட்டான சூழல்களை அனுபவிக்கும் அன்புக்குரிய வெனெசுவேலா நாட்டு மக்கள் உயிர்ப்புச் செய்தியை மிகவும் சக்திமிக்கதாய் உணரட்டும். நாட்டின் வருங்காலத்திற்குப் பொறுப்பானவர்கள் அனைவரோடும் உரையாடல் மற்றும் ஒத்துழைப்பைத் தேடி பொது நலனுக்காக உழைப்பார்களாக.

உயிர்த்த கிறிஸ்துவின் உயிர்ப்புச் செய்தி, அனைத்து மனித சமுதாயத்தின் வாழ்வுக்கான செய்தி. இது எல்லாக் காலங்களிலும் பிரதிபலிக்கும் செய்தி. போர், பசி, வறுமை மற்றும் சமூக அநீதிக்கு அஞ்சி நாட்டைவிட்டு வெளியேறும் ஏராளமான சிறார் உட்பட, புலம்பெயர்ந்தவர் மற்றும் அகதிகள் என, நல்லதோர் எதிர்காலத்தைத் தேடும் அனைவரையும் மறக்க வேண்டாம் என இச்செய்தி அழைப்பு விடுக்கின்றது. இவர்கள் வரும் வழியில் அடிக்கடி மரணத்தையும், இவர்களை வரவேற்று உதவியளிக்கக் கூடியவர்களால் புறக்கணிப்பையும் எதிர்கொள்கின்றனர். நடக்கவிருக்கும் உலக மனிதாபிமான உச்சி மாநாடு, மனிதரையும், அவர்களின் மாண்பையும் மையப்படுத்தி நடப்பதிலிருந்து தவறாதிருக்கட்டும்.

இந்தப் பூமி, பேராசையால் அடிக்கடி பயன்படுத்தப்பட்டு வருவதால் அதன் சமத்துவநிலையில் மாற்றம் இருந்தாலும், இந்த மகிமையான நாளில் பூமி அகமகிழட்டும். காலநிலை மாற்றத்தால் வறட்சி அல்லது பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளைச் சிறப்பாக நினைத்துப் பார்க்கின்றேன்.

தங்களின் விசுவாசத்திற்கும், கிறிஸ்துவின் பெயருக்கு விசுவாசமாக இருப்பதாலும் நசுக்கப்படும் சகோதர சகோதரிகளோடு சேர்ந்து, நம் ஆண்டவரின் ஆறுதல் தரும் வார்த்தைகளை மீண்டும் கேட்போம். “துணிவுடன் இருங்கள், நான் உலகின்மீது வெற்றி கண்டுவிட்டேன்” (யோவா.16,33). கிறிஸ்து சாவை அழித்து மரணத்தை வென்றுள்ளார் (காண்க. 2திமொ.1,10). எனவே இவ்வெற்றியின் சுடர்விடும் நாள் இது. நம் சமுதாயத்தில், வாழ்வில் நம்பிக்கை மற்றும் மகிழ்வை இழந்த அனைவருக்கும், தனிமையாகப் போராடி தங்களின் சக்தி தேய்ந்து வருவதாக உணரும் வயதானவர்கள், எதிர்காலம் இல்லாததாக உணரும் இளையோர் என, எல்லாருக்கும் மீண்டும் உயிர்த்த ஆண்டவரின் வார்த்தைகளைச் சொல்கிறேன். இதோ நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்... தாகமாய் இருப்போருக்கு வாழ்வு அளிக்கும் நீரூற்றிலிருந்து நான் இலவசமாய்க் குடிக்கக் கொடுப்பேன். (திருவெளிப்பாடு 21: 5-6) இந்த ஆறுதலளிக்கும் இயேசுவின் செய்தி, இறைவனோடும், நம் சகோதர சகோதரிகளோடும் ஒப்புரவாகுவதற்கு அதிகத் துணிச்சலுடன் மீண்டும் வாழ்வைத் தொடருவதற்கு நமக்கு உதவுவதாக.

இவ்வாறு ஊர்பி எத் ஓர்பி செய்தியை நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வளாகத்திலும், அதன் முன்புறமுள்ள அகன்ற சாலையிலும் கூடிநின்ற பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உயிர்ப்புப் பெருவிழா வாழ்த்துச் சொன்னார். பின்னர் தனது சிறப்பு ஆசிரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்த ஆசிரை, வானொலி, தொலைகாட்சி வழியாக உட்பட, தகுந்த தயாரிப்போடும், மரியாதையோடும் பெறுபவர்க்குப் பரிபூரண பலன் உண்டு. ஊர்பி எத் ஓர்பி செய்தி மற்றும் ஆசிர், ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்மஸ் மற்றும் கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழா நாள்களில் மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை பல நாடுகளுக்கு நேரடியாகவும் ஒளிபரப்பப்படுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.