2016-03-27 11:44:00

திருத்தந்தை: நம்பிக்கையின்மை, நம்மை மூடியிருக்கும் முதல் கல்


மார்ச்,27,2016. மார்ச் 26, சனிக்கிழமை இரவு, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் நடைபெற்ற உயிர்ப்புப் பெருவிழா திருவிழிப்புத் திருவழிபாட்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய மறையுரை:

அன்பு சகோதர, சகோதரிகளே, 'பேதுரு எழுந்து கல்லறைக்கு ஓடினார்' (லூக்கா 24:12) என்று நற்செய்தியில் வாசிக்கிறோம். கல்லறைக்கு விரைந்த பேதுருவின் மனதில் எவ்வகை எண்ணங்கள் ஓடியிருக்கும்? பேதுரு உட்பட, பதினொரு சீடர்களும், பெண்கள் அளித்த உயிர்ப்பு அறிக்கையை நம்பவில்லை. பேதுருவின் மனதில், இதைத் தவிர, வேறு கவலைகளும் இருந்தன. தன் அன்புக்குரியத் தலைவரை மும்முறை மறுதலித்த துயரம் அவர் மனதை நிறைத்திருந்தது.

ஆயினும், அவரில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது - 'பேதுரு எழுந்தார்' (லூக்கா 24:12). தன்னுடைய துயரத்திலும், கவலைகளிலும் ஆழ்ந்து, அவர் வீட்டிலேயே தங்கிவிடவில்லை. அவர், தன்னைப் பற்றி சிந்திப்பதை விட்டுவிட்டு, இயேசுவைத் தேடிச் சென்றார். இதுவே, அவர் மனதில் உயிர்ப்பை ஆரம்பித்து வைத்தது. இறைவனின் ஒளி, தன் உள்ளத்தில் நுழைவதற்கு அவர் அனுமதியளித்தார்.

அந்தப் பெண்களும் விடியற்காலையில் இதே போன்றதொரு அனுபவத்தைப் பெற்றனர். 'உயிரோடு இருப்பவரைக் கல்லறையில் தேடுவதேன்?' (24:5) என்று வானதூதர் சொன்ன வார்த்தைகள், அச்சமுற்று, தலைகுனிந்து நின்ற அப்பெண்களுக்குள், மாற்றங்களை உருவாக்கின.

பேதுருவைப்போல், அப்பெண்களைப் போல், நாமும், சோகத்திலும், நம்பிக்கையற்ற நிலையிலும் வாழ்வைக் கண்டுகொள்ள முடியாது என்பதை உணரவேண்டும். நமக்குள் நாமே சிறைப்பட்டிருக்க வேண்டாம். முற்றலும் மூடி, முத்திரையிடப்பட்ட கல்லறைகளைத் திறந்து, அங்கு, ஆண்டவர் நுழைவதற்கு அனுமதிப்போமாக. நம்பிக்கையின்மையே, நம்மை மூடியிருக்கும் முதல் கல். இந்தச் சிறையிலிருந்து இறைவன் நம்மை மீட்பதற்கு அவரை அனுமதிப்போமாக.

நமக்குள்ளும், நம்மைச் சுற்றியும், தொடர்ந்து, பிரச்சனைகளைச் சிந்திப்போம். ஆயினும், அச்சமும், இருளும் நம்மை ஆதிக்கம் செலுத்த விடாதிருப்போம். அச்சத்தையும், இருளையும் கண்டு, "அவர் இங்கே இல்லை. அவர் உயிர்த்துவிட்டார்" (24:6) என்று முழக்கமிடுவோம்.

இறைவனே நம் பெரும் மகிழ்வு; அவர் நம்மைக் கைவிடாமல், எப்போதும் நம்முடன் இருக்கிறார். இது, வெறும் மனநிலையில் ஆர்வத்தைத் தரும் எண்ணம் அல்ல, இதுவே, நம் நம்பிக்கை. நம்மிலிருந்து வெளியேறி, இறைவனுக்கு நம் உள்ளத்தைத் திறக்கும்போது, இறைவன் நமக்கு வழங்கும் கொடையே, கிறிஸ்தவ நம்பிக்கை. தூய ஆவியார் நம் உள்ளங்களில் பொழியப்படுவதால் வரும் நம்பிக்கை இது.

தூய ஆவியார், ஒரு மந்திரக்கோல் கொண்டு, நம்மைச் சுற்றி நடப்பன அனைத்தையும் ஒரு நொடியில் மாற்றிவிடமாட்டார். ஆனால், அவர் நமக்குள் வாழ்வைப் பொழிகிறார்.

அவர் பொழியும் வாழ்வு, பிரச்சனைகள் அற்ற வாழ்வல்ல; மாறாக, இறைவனால், கிறிஸ்துவால் அன்பு செய்யப்படுகிறோம் என்ற உறுதியால் வரும் வாழ்வு. பாவம், மரணம், அச்சம் அனைத்தையும் வென்ற கிறிஸ்து வழங்கும் வாழ்வு.

ஆண்டவர் வாழ்கிறார்; அவரை வாழ்வோர் நடுவில் தேடவேண்டும் என்று அவர் விழைகிறார். அவரைத் தேடிக் கண்டபின், அவர் உயிர்த்துவிட்டார் என்ற செய்தியை அறிவிக்க நாம் ஒவ்வொருவரும் அனுப்பப்படுகிறோம்.

வாழ்வின் பொருளைக் காணமுடியாமல் போராடும் அனைவருக்கும், இந்த அறிவிப்பு மிக்க அவசியம். இந்த அறிவிப்பில், நாம் நம்மைப் பறைசாற்றுவதில்லை; மாறாக, நம்பிக்கையின் ஊழியர்களாக, உயிர்த்த இறைவனைப் பறைசாற்றுகிறோம்.

இந்த நம்பிக்கையில் எவ்விதம் உறுதி பெறுவது? இன்றைய இரவு வழிபாடு நமக்கு வழி காட்டுகிறது. "அவர் உங்களுக்குச் சொன்னதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்" (24:6) என்று வானதூதர் சொன்னது, நமக்கு இந்த வழியைக் காட்டுகிறது. இயேசு சொன்னவற்றை, செய்தவற்றை எப்போதும் நினைவுபடுத்திக் கொள்வோம்; இல்லையேல், நாம் நம்பிக்கை இழந்துவிடுவோம்.

ஆண்டவர் இயேசுவின் சொற்களை, செயல்களை, நன்மைத்தனத்தை எப்போதும் நினைவில் கொள்வோம்; உயிர்த்த ஆண்டவரை, அனைவரும் காண்பதற்கு நாம் உதவியாக இருப்போம்.

அன்பு சகோதர, சகோதரிகளே, கிறிஸ்து உயிர்த்துவிட்டார்! நம்பிக்கையே, அவர் அளிக்கும் கொடை. இந்த நம்பிக்கையை உள்ளத்தில் ஏற்று, புறப்படுவோம்!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.