2016-03-19 15:57:00

வார்த்தைகள் ஏதுமின்றி வழிகாட்டும் புனித யோசேப்பு - கர்தினால்


மார்ச்,19,2016. இயேசுவின் வளர்ப்புத் தந்தை புனித யோசேப்பு பேசிய வார்த்தைகளாக விவிலியத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை எனினும், அவரைப் பற்றி நற்செய்தியாளர்கள் விவரித்துள்ளவை, அவரின் ஆன்மீகத்தை எடுத்துரைப்பவைகளாக உள்ளன என்றார், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின்.

முன்னாள் யுக்கோஸ்லாவிய குடியரசான மசடோனியாவில், மேய்ப்புப்பணி சார்ந்த பயணம் மேற்கொண்டு வரும் திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின் அவர்கள், அருளாளர் அன்னை தெரேசா அவர்களின் பிறப்பிடமான, Skopje நகரின், இயேசுவின் திரு இருதய கோவிலில் வெள்ளியன்று மாலை திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றுகையில், புனித யோசேப்பின் சிறப்புப் பண்புகள் குறித்து எடுத்துரைத்தார்.

அன்னை மரியா கருதரித்தது குறித்த குழப்பம் தனக்குள் எழுந்தாலும், அதற்கு இரையாகாமல், இறைவனின் தீர்வுக்கு செவிமடுத்த புனித யோசேப்பு, இயேசுவின் மீட்புப் பணியிலும் பங்கெடுக்கிறார் என்றார் கர்தினால் பரோலின்.

இறைச் சட்டங்களை ஒழுங்காக கடைபிடித்ததன் வழியாக மத்தேயு நற்செய்தியாளரால் 'நீதிமான்' என அழைக்கப்படும் புனித யோசேப்பு, நம் நியாயமான விருப்புகளையும் தாண்டி, இறைவனில் நாம் நம்பிக்கைக் கொள்ளவேண்டும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளார் என மேலும் தன் மறையுரையில் எடுத்தியம்பினார் கர்தினால் பரோலின்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.