2016-03-19 13:51:00

குருத்தோலை ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


குருத்தோலை ஞாயிறு, புனித வாரம், இளையோர் உலக நாள் என்ற மூன்று கருத்துக்களைச் சுற்றி நம் சிந்தனைகள் இன்று வலம் வருகின்றன. குருத்தோலை ஞாயிறு என்றதும், ஒரு வரலாற்றுப் பதிவு என் நினைவுக்கு வருகிறது. அந்த வரலாற்றுப் பதிவின் தலைப்பு: The Palm Sunday Tornado 1920… குருத்தோலை ஞாயிறு சூறாவளி 1920. அவ்வாண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஜியார்ஜியா, ஒஹாயோ, இந்தியானா மாநிலங்களில், குருத்தோலை ஞாயிறன்று வீசிய 37 சூறாவளிகளைப் பற்றிய செய்தி அது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் சூறாவளிகள் ஏற்படுவது, அமெரிக்க ஐக்கிய நாட்டின் வானிலை அறிக்கைகளில் வரும் ஒரு செய்திதான். இதே மாதங்களில்தான் தவக்காலத்தின் இறுதி நாட்களும் இடம்பெறுகின்றன. குருத்தோலை ஞாயிறு, சூறாவளி... இவை இரண்டையும் இணைத்து, நம் சிந்தனைகளை ஆரம்பிப்போம்.

சூறாவளி என்ன செய்யும்? சுழற்றி அடிக்கும்; எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டிப்போடும். இந்தக் கோணத்தில் பார்க்கும்போது, முதல் குருத்தோலை ஞாயிறு நிகழ்வுகள், எருசலேமில் பல விடயங்களைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டன என்பதை உணரலாம். இயேசு, எருசலேமில் நுழைந்தபோது, யாருடைய தூண்டுதலுமின்றி, மக்கள், தாங்களாகவே கூடிவந்து அவரை வரவேற்றனர். இதைச் சொல்லும்போது, மனம் தானாகவே, தமிழகத்தில் நடைபெறவிருக்கும் தேர்தலை எண்ணிப் பார்க்கிறது. கட்சிக் கூட்டங்கள் எவ்வாறு நடத்தப்படுகின்றன என்பது அனைவருக்கும் தெரிந்த அவலங்கள். திருவிழா நாட்களில், எருசலேமில், தானாகவே உருவாகும் மக்கள் கூட்டங்கள், மதத் தலைவர்களுக்கும், உரோமைய அரசுக்கும் அச்சத்தை உருவாக்கின. இயேசுவைச் சுற்றி உருவான இந்தக் கூட்டத்தைக் கண்டு, அதிகார வர்க்கம் ஆட்டம் கண்டது.

இயேசு தன் பணிவாழ்வை ஆரம்பித்ததிலிருந்தே, யூத மதத் தலைவர்களின் அதிகார வாழ்வு ஆட்டம் கண்டது. இந்தத் தலைகீழ் மாற்றங்களின் சிகரமாக, எருசலேம் நகரில் இயேசு ஊர்வலமாய் வந்தார். அதைத் தொடர்ந்து, மத குருக்களின் அரணாக இருந்த எருசலேம் கோவிலில் அவர் நுழைந்து, அங்கு குப்பையாய் குவிந்திருந்த அவலங்களை, சாட்டையைச் சுழற்றி, சுத்தப்படுத்தினார். எனவே, முதல் குருத்தோலை ஞாயிறு, அதிகார அமைப்புகளை, பல வழிகளிலும் புரட்டிப் போட்ட ஒரு சூறாவளிதானே!

இரண்டாவது, நமது சிந்தனைகளில் வலம்வரும் கருத்து, புனித வாரம். குருத்தோலை ஞாயிறு முதல், உயிர்ப்பு விழா வரை உள்ள இந்த எழுநாட்களையும், தாய் திருஅவை, புனிதவாரம் என்று அழைக்கிறது. வருடத்தின் 52 வாரங்களில், இந்த வாரத்தை மட்டும் ஏன் புனிதவாரம் என்று அழைக்க வேண்டும்? இயேசு, இவ்வுலகில் வாழ்ந்த இறுதி நாட்கள் இவை என்பதாலும், நம் மீட்பு வரலாற்றின் உச்சகட்ட நிகழ்வுகள், இந்த வாரத்தில் நிகழ்ந்ததாலும், இதை புனிதவாரம் என்றழைக்கிறோம்.

அந்த இறுதி நாட்களில் நடந்தவற்றில் புனிதம் எதுவும் வெளிப்படையாகத் தெரியவில்லையே! ஒரு நண்பர் காட்டிக்கொடுத்தார். மற்றொரு நண்பர் மறுதலித்தார். ஏனைய நண்பர்கள், ஓடி, ஒளிந்துகொண்டனர். மனசாட்சி விலைபோனதால், பொய்சாட்சிகள் சொல்லப்பட்டன. இயேசு என்ற இளைஞன் நல்லவர், குற்றமற்றவர் என்று தெரிந்தும், தவறாகத் தீர்ப்பு சொல்லப்பட்டது. இறுதியில், அந்த இளைஞனை அடித்து, கிழித்து, ஒரு கந்தல் துணிபோல் சிலுவையில் தொங்கவிட்டனர்.

நாம் இங்கே பட்டியலிட்டவற்றில் புனிதம் எங்காவது தெரிந்ததா? புனிதம் என்பதற்கே வேறொரு இலக்கணம் எழுத வேண்டியுள்ளதே. ஆம், வேறொரு இலக்கணம்தான் எழுதப்பட்டது. கடவுள் என்ற மறையுண்மைக்கே மாற்று இலக்கணம் தந்தவர் இயேசு. கடவுள், துன்பப்படக் கூடியவர்தான். அதுவும், அன்புக்காக, எத்தகைய துன்பமாயினும், எவ்வளவு துன்பமாயினும், மனமுவந்து ஏற்பவரே நம் கடவுள் என்று, கடவுளைப்பற்றி வித்தியாசமான ஓர் இலக்கணத்தை இயேசு அந்தச் சிலுவையில் சொன்னார். வெளிப்படையாகத் தெரியாத இந்தப் புனிதத்தை, நாம், தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். புனிதவாரம் முழுவதும், நாம் கற்றுக்கொள்ளக்கூடிய, கற்றுக்கொள்ள வேண்டிய, வாழ்க்கைப் பாடங்கள் பல உள்ளன. கற்றுக்கொள்ளச் செல்வோம் கல்வாரிக்கு.

கல்வாரி என்றதும், நம் சிந்தனைகளில் செதுக்கப்படும் ஓர் அடையாளம்... சிலுவை. உரோமையர்கள் கண்டுபிடித்த சித்திரவதைக் கருவிகளிலேயே மிகவும் கொடூரமானது, சிலுவை. பெரும் பாதகம் செய்த குற்றவாளிகளை நிர்வாணமாக்கி, அவர் உள்ளங்களை அவமானத்தால் நொறுக்கி, உயிர்களைப் பறிக்கும் கொலைக் கருவிதான் சிலுவை. அந்த அவமானச் சின்னத்தை, அந்தக் கொலைக்கருவியை, இன்று, நாம் கோவில் கோபுரங்களிலும், பீடங்களிலும் வைத்து வணங்குகிறோம் என்றால், அதற்கு ஒரே காரணம்... இயேசு. சிலுவையில் அறையுண்ட இயேசுவின் உருவம், கோடான கோடி மக்களின் வாழ்வில் சூறாவளியை உருவாக்கி, முற்றிலும் புரட்டிப்போட்டுள்ளது; மீட்பைக் கொணர்ந்துள்ளது. புனிதத்திற்குப் புது இலக்கணம் வகுத்துள்ளது.

சிலுவையில் அறையுண்ட இயேசு, ஒருவர் வாழ்வில் உருவாக்கும் மாற்றங்களைப் பற்றி William J. Bausch என்ற அருட்பணியாளர் எழுதிய ஒரு கதை இது. 19ம் நூற்றாண்டின் துவக்கத்தில் வாழ்ந்த ஓர் ஆயரைப் பற்றிய கதை. இந்த ஆயர் சிறந்த மறையுரையாளர். இறைவனை நம்பாதவர்கள், திருஅவையை வெறுத்துப் பழிப்பவர்கள் ஆகியோரைத் தேடிச்சென்று, அவர்களிடம் பேசி வந்தார், இந்த ஆயர். அவர்களிடம் அடிக்கடி ஒரு நிகழ்வை எடுத்துச் சொல்வது இவர் வழக்கம்.

பாரிஸ் நகரில் புகழ்பெற்ற Notre Dame பேராலயத்தின் வாசலில், ஒவ்வொரு ஞாயிறன்றும் இளைஞன் ஒருவர் நின்றுகொண்டு, ஞாயிறு திருப்பலிக்குச் செல்லும் அனைவரையும் முட்டாள்கள் என்று உரத்தக் குரலில் கேலிசெய்து வந்தார். கோவிலுக்குச் செல்பவர்கள் அவரைக் கண்டு பயந்து, ஒதுங்கி சென்றனர். ஒவ்வொரு வாரமும் இந்த இளைஞனின் ஆர்ப்பாட்டம் கூடிவந்தது.

ஒரு முறை, ஞாயிறு திருப்பலிக்கு முன், பங்குத்தந்தை, பேராலய வாசலுக்குச் சென்றார். அவரைக் கண்டதும், இளைஞனின் கேலிப்பேச்சு உச்ச நிலையை அடைந்தது. இளைஞனின் கேலிகளை எல்லாம் பொறுமையுடன் கேட்ட பங்குத்தந்தை அவரிடம், "நான் இப்போது உனக்கு விடுக்கும் சவாலை உன்னால் நிறைவேற்ற முடியாது. உனக்கு அவ்வளவு தூரம் வீரமில்லை" என்று கூறினார். இதைக் கேட்டதும் இளைஞனின் கோபமும், கேலியும் கட்டுக்கடங்காமல் சென்றன. "முட்டாள் சாமியாரே! எனக்கேச் சவால் விடுகிறாயா? சொல், எதுவாயினும் செய்து காட்டுகிறேன்." என்று அனைவரும் கேட்கும்படி கத்தினார். பங்குத்தந்தை அமைதியாகத் தொடர்ந்தார்: "கோவிலுக்குள் வா. பீடத்திற்கு முன் நின்று, சிலுவையில் இருக்கும் இயேசுவை உற்றுப்பார். பின்னர், உன்னால் முடிந்த அளவு உரத்தக் குரலில், 'கிறிஸ்து எனக்காக சிலுவையில் இறந்தார். ஆனால், அதைப்பற்றி எனக்குச் சிறிதும் கவலையில்லை' என்று நீ கத்தவேண்டும். உன்னால் முடியுமா?" என்று பங்குத்தந்தை சவால் விடுத்தார்.

அந்தச் சவாலைத் துச்சமாக மதித்த இளைஞன், பீடத்தை நெருங்கினார். பின்னர், உரத்தக் குரலில் "கிறிஸ்து எனக்காக சிலுவையில் இறந்தார். ஆனால், அதைப்பற்றி எனக்குச் சிறிதும் கவலையில்லை" என்று கத்தினார். பங்கு குரு அவரிடம், "நன்றாகக் கத்தினாய். இன்னொரு முறை கத்து" என்றார். இரண்டாவது முறையும் இளைஞன் கத்தினார். ஆனால், இம்முறை, அவரது குரலில் கொஞ்சம் தடுமாற்றம் தெரிந்தது. பங்குத்தந்தை, இளைஞனிடம், "தயவுசெய்து, இறுதியாக ஒரு முறை மட்டும் கோவிலில் உள்ள அனைவரும் கேட்கும்படி கத்திவிட்டு, பின்னர் நீ போகலாம்" என்று கூறினார். இம்முறை, இளைஞன் சிலுவையை உற்றுப்பார்த்தார். அவர் கத்த முற்பட்டபோது, வார்த்தைகள் வரவில்லை. சிலுவையில் அறையப்பட்டிருந்த இயேசுவை அவரால் தொடர்ந்து பார்க்க முடியவில்லை. கண்களைத் தாழ்த்தினார். கண்ணீர் வழிந்தோடியது.

இந்த நிகழ்வை விவரித்துக் கூறிய ஆயர், சிறிதுநேரம் அமைதியாக இருந்தபின், தொடர்ந்தார்: "அந்த இளைஞன் நான்தான். கடவுள் எனக்குத் தேவையில்லை என்று வாழ்ந்தவன் நான். ஆனால், கடவுள் எனக்குத் தேவை என்பதை, சிலுவையில் தொங்கிய இயேசு எனக்கு உணர்த்தினார். அது மட்டுமல்ல, நான் கடவுளுக்குத் தேவை என்பதையும் அவர் எனக்குப் புரியவைத்தார்" என்று கூறினார் அந்த ஆயர்.

சிலுவையில் அறையுண்ட இயேசுவை இந்த புனித வாரம் முழுவதும் அடிக்கடி சந்திக்கவும், சிந்திக்கவும் இருக்கிறோம். நமக்குள் என்னென்ன மாற்றங்கள் உருவாகப் போகின்றன? அந்த இளைஞனை ஆட்கொண்டு, அவர் வாழ்வை மாற்றிய இறைவன், இன்றைய உலகில் வாழும் இளையோரின் வாழ்வில் மாற்றங்களை உருவாக்க வேண்டுவோம்.

சிலுவையில் அறையுண்ட இயேசுவையும், இளையோரையும் இணைத்துச் சிந்திக்கும்போது, இன்றைய மூன்றாவது கருத்து மனதில் எழுகிறது. அதுதான், உலக இளையோர் நாள். ஒவ்வோர் ஆண்டும் குருத்தோலை ஞாயிறன்று, தாய்த் திருஅவை, உலக இளையோர் நாளைக் கொண்டாடுகிறது. இளையோரைக் குறித்து உலகம் கொண்டிருக்கும் முற்சார்பு எண்ணங்கள், இளையோர் உலக நாள் முதல்முறை வத்திக்கானில் கொண்டாடப்பட்டபோதே உடைத்து எறியப்பட்டன.

1984ம் ஆண்டு, குருத்தோலை ஞாயிறன்று, இளையோரை உரோம் நகருக்கு வரும்படி, புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், அழைத்திருந்தார். அவரது அழைப்பை ஏற்று வருகைதரும் இளையோரின் எண்ணிக்கை, 60,000 இருக்கும் என்று திருஅவைத் தலைவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அன்று, ஒரு சூறாவளி, உரோம் நகரில் நுழைந்து, தலைவர்களின் எதிர்பார்ப்பைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டது. ஆம், அன்று, உரோம் நகரில் 60,000 அல்ல, 300,000 இளையோர் கூடி வந்திருந்தனர். அங்கு, கூடியிருந்த இளையோரைக் கண்டு, புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் கூறிய அற்புதமான வார்த்தைகள், "உலக இளையோர் நாள்" என்ற எண்ணத்திற்கு வித்திட்டன:

"ஆயிரமாயிரம் இளையோர், இவ்வளவு ஆர்வமாகக் கூடிவந்து, அர்த்தமுள்ள முறையில் இந்நாளைச் சிறப்பித்தது, உண்மையிலேயே வியப்பிற்குரியது. ஆன்மீக உணர்வுகளையும், உயர்ந்த கொள்கைகளையும் இளையோர் இழந்துவிட்டனர் என்று, இப்போது, யாரால் சொல்லமுடியும்? அவர்களை நம்புவது வீண் என்று, இனி யாராலும் சொல்லமுடியுமா?" என்று புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் இளையோருக்கு நற்சான்றிதழ் வழங்கியதை, இளையோர் ஆரவாரமாக வரவேற்றனர்.

அன்று கொண்டாடப்பட்ட குருத்தோலை ஞாயிறு வழிபாட்டிற்குப் பின், திருத்தந்தை, புனித 2ம் ஜான்பால் அவர்கள், ஓர் அற்புத அடையாளச் செயலைச் செய்தார். 1983ம் ஆண்டு கொண்டாடப்பட்ட மீட்பின் புனித ஆண்டுக்கென புனித பேதுரு பசிலிக்காவில் வைக்கப்பட்டிருந்த சிலுவையை, இளையோர் கரங்களில் திருத்தந்தை ஒப்படைத்தார். கிறிஸ்துவின் அளவற்ற அன்பைப் பறைசாற்றும் அந்த அற்புத அடையாளத்தை, இளையோர் உலகெங்கும் எடுத்துச் செல்லவேண்டும் என்று, திருத்தந்தை இளையோரிடம் குறிப்பாக விண்ணப்பித்தார்.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொண்டாடப்பட்டு வரும் இந்த இளையோர் நாளின் மையமாக அமையும் ஓர் அடையாளம்... சிலுவை. துன்பங்களைக் கண்டால், பயந்து, விலகி, இன்பத்தை மட்டுமே தேடிச் செல்பவர், இளையோர், என்ற தவறான கண்ணோட்டத்தை மாற்றியமைக்கும் வண்ணம், உலக இளையோர் நாள் நிகழ்வுகளின் மைய அடையாளமாக விளங்குவது, அவர்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் சுமந்துச் செல்லும் சிலுவை. பல்வேறு நாடுகளில் நடைபெற்ற உலக இளையோர் நாள் நிகழ்வுகளில், இளையோர் சுமந்து சென்றுள்ள சிலுவை, இவ்வாண்டு, போலந்து நாட்டின் கிரகோவ் (Krakow) நகரில் நடைபெறும் உலக இளையோர் நாள் நிகழ்வுகளின் மையமாக மீண்டும் அமையும்.

இரக்கத்தின் யூபிலி ஆண்டின் ஒரு சிகர நிகழ்வாக, வரும் ஜூலைமாதம், போலந்து நாட்டில் சிறப்பிக்கப்படும் உலக இளையோர் நாளின் மையக் கருத்து: இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். (மத்தேயு 5:7) இளையோர் உள்ளங்களில் உருவாகும் இரக்கம், ஒரு சூறாவளியாய் இவ்வுலகில் நுழைந்து, இங்கு வளர்ந்துள்ள வெறுப்பு மரங்களை வேரோடு சாய்த்து, நட்பு மரங்களை நட்டு வைக்கவேண்டும் என்று இறைவனிடம் இறைஞ்சுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.