2016-03-18 16:15:00

இந்தியாவில் சூரத் இரயில் நிலையம் மிகவும் சுத்தமானது


மார்ச்,18,2016. இந்தியாவிலேயே மிகவும் சுத்தமான இரயில் நிலையம், குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் இரயில் நிலையம் என இந்திய இரயில் மற்றும் சுற்றுலாத் துறைகளின் இணைந்த அமைப்போன்று நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

இந்திய இரயில் உணவுத்துறையும், சுற்றுலாத்துறையும் இணைந்த IRCTC என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள், இவ்வாண்டு ஜனவரி - பிப்ரவரி மாதங்களுக்கு இடையே பல்வேறு ரயில் நிலையங்களிலும் பயணிகளிடமும் கருத்துக் கணிப்பை மேற்கொண்டனர்.

அதன் அடிப்படையிலேயே இந்த தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 1.34 இலட்சம் பயணிகளிடம் கருத்து கணிப்பு நடத்தப்பட்டபோது, தூய்மை தொடர்பாக 40 அம்சங்கள் குறித்து அவர்களிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 407 இரயில் நிலையங்கள், வருமான அடிப்படையில் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. அதாவது ரூ.50 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டும் 75 இரயில் நிலையங்கள் ஏ-1 என்ற பிரிவின் கீழும் ரூ.6 கோடி முதல் ரூ.50 கோடி வரை வருமானம் ஈட்டும் 332 இரயில் நிலையங்கள் ஏ பிரிவின் கீழும் பட்டியலிடப்பட்டன.

இந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஏ-1 பிரிவில் இந்தியாவிலேயே மிகவும் சுத்தமானதாக, குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் இரயில் நிலையமும், 2-வது இடத்தில் இராஜ்கோட் ரயில் நிலையமும் தேர்வாகியுள்ளன. சட்டிஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பிலாஸ்பூர் இரயில் நிலையம் மூன்றாவது இடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

75 ரயில் நிலையங்கள் தர வரிசைப்படுத்தப்பட்டுள்ள இப்பிரிவில், பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி தொகுதிக்குட்பட்ட இரயில் நிலையம், 65-வது இடத்தில், அதாவது மிகவும் அசுத்தமானது என்ற இடத்தில் இருக்கிறது.

ஏ - பிரிவில், பஞ்சாப் மாநிலம் பீஸ் இரயில் நிலையம் சுத்தமானது என்று, முதலிடத்தை பிடித்துள்ளது. 5-வது இடத்தில் தமிழகத்தின் கும்பகோணம் இரயில் நிலையம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.