2016-03-18 16:08:00

Instagram செயலியில் தன் பகிர்வுகளைத் துவங்கும் திருத்தந்தை


மார்ச்,18,2016. படங்களைப் பகிர்ந்துகொள்ள உதவும் Instagram என்ற வலைத்தள செயலியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 19, இச்சனிக்கிழமையன்று செயலாற்றத் துவங்குகிறார் என்று, வத்திக்கான் ஊடகத் துறையின் தலைவர், அருள்பணி, தாரியோ எதொவார்தோ விகனோ (Dario Edoardo Viganò) அவர்கள் கூறினார்.

இன்றைய உலகில் படங்கள் சக்திவாய்ந்த தொடர்புகளை உருவாக்குகின்றன என்பதை நன்கு அறிந்துள்ளத் திருத்தந்தை, 'Franciscus' என்ற பெயரில் Instagram செயலியில் தன் பகிர்வுகளைத் துவங்குகிறார் என்று, அருள்பணி விகனோ அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

தன் சொற்களால் மட்டுமல்ல, அதைவிடக் கூடுதலாக தன் செயல்கள் வழியே, மக்கள் மனங்களில் ஆழமானத் தாக்கங்களை உருவாக்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில் Instagram வழியே தன் செயல்பாடுகளின் படங்களை உலகினரோடு பகிர்ந்துகொள்வது, பொருத்தமானதாக உள்ளது என்று, வத்திக்கான் ஊடகத் துறையின் தலைவர், அருள்பணி விகனோ அவர்கள் எடுத்துரைத்தார்.

இதற்கிடையே, "தங்கள் பாவங்களுக்காக மனம் வருந்துவோரின் குற்றங்கள் எவ்வளவு பெரியதோ, அந்த அளவு பெரியதாக, திருஅவை அவர்கள் மீது காட்டும் அன்பும் இருக்கவேண்டும்" என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளிக்கிழமை, தன் டுவிட்டர் பக்கத்தில் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.