2016-03-17 16:11:00

யூபிலி கண்காட்சியைத் திறந்து வைத்த கர்தினால் பரோலின்


மார்ச்,17,2016. கத்தோலிக்கத் திருஅவையில் கொண்டாடப்பட்ட யூபிலி ஆண்டுகள், ஆன்மீக நிகழ்வுகள் என்றாலும், அவை, உரோம் நகரின் தனித்துவம் மிக்க பாரம்பரியமாகவும் விளங்குகின்றன என்று, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கூறினார்.

நடைபெறும் இரக்கத்தின் சிறப்பு யூபிலியையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமைப் பணியேற்ற மூன்றாம் ஆண்டு நிறைவையும் இணைத்து, உரோம் நகரில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு யூபிலி கண்காட்சியைத் திறந்து வைத்த கர்தினால் பரோலின் அவர்கள், தன் துவக்க உரையில் இவ்வாறு கூறினார்.

1300ம் ஆண்டு முதல், திருஅவையில் பல்வேறு யூபிலி ஆண்டுகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்றும், இந்த யூபிலி ஆண்டுகளின் ஓர் அடிப்படை அம்சம், இரக்கம் என்றும், கர்தினால் பரோலின் அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

மனிதர்களோடு நடக்க இறைவன் எப்போதும் விழைகிறார் என்ற உண்மையே, ஒவ்வொரு யூபிலியின் வழியாகவும் திருஅவை இவ்வுலகிற்குக் கூறவிழையும் ஒரு முக்கியமான செய்தி என்று கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், பழிக்குப் பழி என்ற உணர்வில் தோய்ந்திருக்கும் இவ்வுலகிற்கு, இரக்கம், மிகத் தேவையான ஓர் உண்மை என்று வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.