2016-03-17 15:48:00

திருத்தந்தை: கிறிஸ்தவ நம்பிக்கை, பணிவான, உறுதியான புண்ணியம்


மார்ச்,17,2016. கிறிஸ்தவ நம்பிக்கை, பணிவான, உறுதியான ஒரு புண்ணியம் என்றும், வாழ்வின் பல துயரங்களில் நம்மைத் தாங்கி நிற்பது, இந்த நம்பிக்கையே என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை, தன் மறையுரையில் கூறினார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றியத் திருப்பலியில், இறைவன் நம்மைக் கைவிடுவதேயில்லை என்ற எண்ணம் ஒன்றே நமக்கு உண்மை மகிழ்வைத் தரும் என்று தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

இன்றைய முதல் வாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆபிரகாம், தன் நம்பிக்கையில் தளர்வதற்கு பல சூழல்கள் எழுந்தாலும், இறைவன் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதை, தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார், திருத்தந்தை.

'எதிர் நோக்கிற்கு இடம் இல்லாததுபோல் தோன்றினும், ஆபிரகாம் எதிர்நோக்கினார்' (உரோமையர் 4:18) என்று திருத்தூதர் பவுல் கூறுவதை தன் மறையுரையில் குறிப்பிட்டத் திருத்தந்தை, மனிதர்மீது  நம்பிக்கை சிதைந்துபோகும்போது, இறைவன் மீது கொள்ளும் நம்பிக்கையே நமக்கு மகிழ்வைக் கொணரும் என்று வலியுறுத்தினார்.

ஆபிரகாமில் துவங்கிய எதிர்நோக்கு, இஸ்ரயேல் வரலாற்றில், எலிசபெத்து, மரியா என்று பலர் வழியே மீண்டும், மீண்டும் நமக்குப் புலனாகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

மேலும், "இறைவனின் இரக்கத்திலிருந்து யாரும் ஒதுக்கப்படுவதில்லை; திருஅவையானது, யாரையும் ஒதுக்கி வைக்காமல், ஒவ்வொருவரையும் வரவேற்கும் இல்லமாக விளங்குகிறது" என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழனன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் காணப்பட்டன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.