2016-03-17 16:18:00

திருஅவையில் யூபிலிகள் – உரோம் நகரில் கண்காட்சி


மார்ச்,17,2016. நடைபெறும் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டையொட்டி, திருஅவை வரலாற்றில் இதுவரை இடம்பெற்ற யூபிலி ஆண்டுகளின் நினைவுகள் அடங்கிய ஒரு கண்காட்சி, உரோம் நகரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

1300ம் ஆண்டு, திருத்தந்தை 8ம் போனிபாஸ் அவர்களால் அறிவிக்கப்பட்ட முதல் யூபிலியிலிருந்து, தற்போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்துள்ள இரக்கத்தின் சிறப்பு யூபிலி முடிய அனைத்து யூபிலிகளையும் நினைவுக்குக் கொணரும் புகைப்படங்கள், திருத்தந்தையர் விடுத்த ஆவணங்களின் பிரதிகள், மற்றும் யூபிலிகளையொட்டி வெளியிடப்பட்ட தபால் தலைகள் என்று 500க்கும் மேற்பட்ட பல்வேறு நினைவுப் பொருள்கள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இவையன்றி, கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கும் கணணிகள் வழியே, மேலும் 1,300க்கும் அதிகமான டிஜிட்டல் உருவங்களைக் காணும் வசதியும் செய்து வைக்கப்பட்டுள்ளது.

1300ம் ஆண்டு 8ம் போனிபாஸ் அவர்கள் முதல் யூபிலியை அறிவித்த ஆவணத்தில் காணப்படும் "Antiquorum Habet" என்ற முதல் இரு வார்த்தைகள், இந்த வரலாற்றுக் கண்காட்சியின் பெயராக அமைந்துள்ளன.

உரோம் நகரில் உள்ள Dogana Vecchia சாலையில் அமைந்துள்ள இந்தக் கண்காட்சியை, நுழைவு கட்டணம் ஏதுமின்றி காண முடியும் என்றும், இக்கண்காட்சி மே மாதம் 1ம் தேதி வரை நீடிக்கும் என்றும் இதன் அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.