2016-03-17 16:12:00

குருத்தோலை ஞாயிறன்று திருத்தந்தை ஆசீர்வதிக்கும் ஒலிவ கிளைகள்


குருத்தோலை ஞாயிறன்று திருத்தந்தை ஆசீர்வதிக்கும் ஒலிவக் கிளைகள்

 

மார்ச்,17,2016. புனித பூமி, மற்றும் இத்தாலியின் அசிசி நகர், மோந்தேகஸ்ஸீனோ (Montecassino) ஆகிய இடங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட ஒலிவக் கிளைகளை, மார்ச் 20, குருத்தோலை ஞாயிறு வழிபாட்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆசீர்வதித்து, போலந்து நாட்டு இளையோர் கையில் ஒப்படைப்பார் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு ஜூலை மாதம், போலந்து நாட்டின் கிரகோவ் நகரில் உலக இளையோர் நாள் நிகழ்வுகள் நடைபெறுவதையொட்டி, அந்நாட்டின் இளையோர் மேற்கொண்ட ஒரு முயற்சியின் பயனாக, இந்த அடையாளச் சடங்கு, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் திருத்தந்தையின் தலைமையில் நடைபெறுகிறது.

நடைபெறும் இரக்கத்தின் யூபிலி ஆண்டிற்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 'இரக்கத்தின் முகம்' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கூறப்பட்டிருக்கும் மன்னிப்பு கருத்துக்கள், இம்முயற்சியின் அடிப்படையாக அமைந்தன என்று போலந்து நாட்டு இளையோர் கூறியுள்ளனர்.

அமைதி, ஒப்புரவு, மன்னிப்பு ஆகிய அம்சங்களை சுட்டிக் காட்டுவது, ஒலிவக் கிளைகள் என்பதால், புனித பூமியிலிருந்தும், இத்தாலியின் இருவேறு இடங்களிலிருந்தும் சேகரிக்கப்பட்ட ஒலிவக் கிளைகள் வத்திக்கானுக்குக் கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இயேசு, பாடுகளை அனுபவித்த ஒலிவமலைத் தோட்டத்திலிருந்தும், அமைதியின் தூதனாகக் கருதப்படும் புனித பிரான்சிஸ் அவர்களின் ஊரான அசிசியிலிருந்தும், போலந்து நாட்டின் வீரர்கள் மிக அதிக அளவில் புதைக்கப்பட்டிருக்கும் கல்லறை அமைந்துள்ள மோந்தேகஸ்ஸீனோவிலிருந்தும் ஒலிவக் கிளைகள் சேகரிக்கப்பட்டுள்ளன என்று, இம்முயற்சிகளை மேற்கொண்டுவரும் இளையோர் கூறியுள்ளனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.