2016-03-15 16:48:00

இயேசுவின் முகமாக விளங்கியவர், அன்னை தெரேசா


மார்ச்,15,2016. இயேசுவின் முகமாக இன்றைய உலகிற்கு விளங்கியவர், அன்னை தெரேசா; எனவேதான், அவர் கொல்கத்தாவையும், இந்தியாவையும் தாண்டி, இவ்வுலகம் அனைத்திற்கும் சொந்தமாகக் கருதப்படுகிறார் என்று, கொல்கத்தாவின் முன்னாள் பேராயர், ஹென்றி செபாஸ்டின் டிசூசா அவர்கள் கூறினார்.

இவ்வாண்டு செப்டம்பர் 4ம் தேதி புனிதராக உயர்த்தப்படவிருக்கும் அருளாளர் அன்னை தெரேசாவைக் குறித்து, ஆசிய செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் பேராயர் ஹென்றி டிசூசா அவர்கள் இவ்வாறு கூறினார்.

அன்னை தெரேசா அவர்களின் இறுதி ஊர்வலம் இந்திய அரசின் முழு மரியாதையுடன் நடத்தப்பட்டதையும், அவரது மறைவுக்குப்பின், ஐந்து ஆண்டுகள் காத்திராமல், விரைவிலேயே அவரது புனிதர் பட்ட முயற்சிகள் துவங்கப்பட்டதையும் குறித்து, பேராயர் ஹென்றி டிசூசா அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

மொழி, இனம், மதம், கலாச்சாரம், வாழ்வு நிலை என்ற பல எல்லைகளைக் கடந்து பணியாற்றிய அன்னை தெரேசா அவர்கள், உலகமனைத்திற்கும் பொதுவான ஒரு புனிதராக உயர்த்தப்படுகிறார் என்று கொல்கத்தாவின் முன்னாள் பேராயர் ஹென்றி டிசூசா அவர்கள் எடுத்துரைத்தார். 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.