மார்ச்,10,2016. அகில உலக சமுதாயத்தின் பல்வேறு நிறுவனங்களில், உறுதியான அரசியல் முடிவுகள் எடுக்கமுடியாத நிலை பல பிரச்சைனைகளை உருவாக்குகின்றது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 31வது கூட்டத்தில், திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்றுவரும் அருள்பணி Richard Gyhra
அவர்கள், மதச் சுதந்திரத்திற்கு எதிராக நிகழும் கொடுமைகள் குறித்து தன் கருத்துக்களை வெளியிட்ட வேளையில் இவ்வாறு கூறினார்.
ஒவ்வொரு சமுதாயத்திலும் மதங்களுக்கு உள்ள முக்கியத்துவத்தைக் குறைப்பதால், மதச் சுதந்திரத்திற்கும், பேச்சு சுதந்திரத்திற்கும் எதிராக இழைக்கப்படும் அநியாயங்களைத் தடுக்க முடியாது என்று அருள்பணி Gyhra அவர்கள் கூறினார்.
தொழிநுட்ப ஆதிக்கத்தை உலகமயமாக்குவதன் வழியே, மனித சமுதாயத்தில் உள்ள பன்முக கலாச்சாரங்களையும், மதங்களையும், சிந்தனை ஓட்டங்களையும் ஒருமுகப் படுத்தும் முயற்சிகள் ஆபத்தானவை என்று அருள்பணி Gyhra அவர்கள் தன் உரையில் எடுத்துரைத்தார்.
நம்மிடம் வளர்ந்துள்ள தொழில்நுட்பக் கருவிகள், தொடர்பு தூரத்தைக் குறைத்தாலும், உண்மையான உறவுகளின் தூரங்களைக் குறைக்கவில்லை என்பதையும் அருள்பணி Gyhra அவர்கள், தன் உரையில் கவலையுடன் குறிப்பிட்டார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |