2016-03-09 09:49:00

திருத்தந்தையின் புனித வார, உயிர்ப்பு பெருவிழா திருவழிபாடுகள்


மார்ச்,08,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நிறைவேற்றும் புனித வார மற்றும் உயிர்ப்புப் பெருவிழாத் திருவழிபாடுகள் பற்றிய விபரங்களை, திருத்தந்தையின் திருவழிபாடுகளுக்குப் பொறுப்பான, பேரருள்திரு குய்தோ மரினி அவர்கள் இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ளார்.

மார்ச், 20, குருத்தோலை ஞாயிறன்று காலை 9.30 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், குருத்தோலைகளையும் ஒலிவக் கிளைகளையும் ஆசிர்வதித்து, பவனியாகச் சென்று திருப்பலி நிறைவேற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இதே நாளில், “இரக்கமுடையோர் பேறுபெற்றோர், ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்(மத்.5,7)” என்ற தலைப்பில் 31வது உலக இளையோர் தினமும் சிறப்பிக்கப்படுகின்றது.

மார்ச், 24 புனித வியாழன் காலை 9.30 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், புனித எண்ணெய் மந்திரிக்கும் திருப்பலியை நிறைவேற்றுவார் திருத்தந்தை.

மார்ச், 25 புனித வெள்ளி மாலை 5 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், திருச்சிலுவை ஆராதனை திருவழிபாட்டை நடத்தும் திருத்தந்தை, அன்று இரவு 9.15 மணிக்கு, உரோம் நகரின் கொலோசேயோ எனுமிடத்தில் சிலுவைப்பாதை பக்தி முயற்சியைத் தலைமையேற்று நடத்துவார்.

மார்ச், 26, புனித சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு, ஆண்டவரின் உயிர்ப்புத் திருவிழிப்புத் திருவழிபாடு மற்றும், மார்ச், 27, ஞாயிறு காலை பத்து மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் ஆண்டவரின் உயிர்ப்புப் பெருவிழா திருப்பலியை நிறைவேற்றும் திருத்தந்தை, பகல் 12 மணிக்கு, நகருக்கும் உலகுக்குமான ஊர்பி எத் ஓர்பி செய்தியையும், ஆசிரையும் வழங்குவார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.