2016-03-09 10:54:00

உருது மொழியில் கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி ஏடு


மார்ச்,08,2016. பாகிஸ்தானில், கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி ஏடு, 13 வருட கடின உழைப்புக்குப் பின்னர், உருது மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு, திருப்பீடத்தின் அனுமதி பெற்று வெளியிடப்பட்டுள்ளது.   

இரக்கத்தின் யூபிலி ஆண்டில் இப்பணி நிறைவடைந்துள்ளது குறித்து பாகிஸ்தான் தலத்திருஅவை மகிழ்வாக உள்ளது என்றும், பாகிஸ்தானின் அனைத்துக் கத்தோலிக்க மறைமாவட்டங்கள் மற்றும் பங்குகளில், 5 டாலருக்கு இது விற்பனை செய்யப்படுகின்றது என்றும் கூறினார் அருள்பணி Robert Mc Culloch.

இந்த வெளியீடு குறித்துப் பேசிய, அந்நாட்டில் 34 ஆண்டுகளாக மறைப்பணியாற்றும் புனித கொலம்பன் சபையின் பொதுப் பொருளாளர் அருள்பணி Robert Mc Culloch அவர்கள், சிறார், இளையோர், வயதுவந்தவர் என, எல்லா நிலைகளிலும் உள்ளவர்களின் மறைக்கல்விக்கு இந்த ஏடு உதவும் என்று கூறினார்.

அதோடு, முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பாகிஸ்தானில், பல்சமய உரையாடலுக்கும் உதவும் என்றுரைத்த அருள்பணி Robert Mc Culloch அவர்கள், அந்நாட்டின் முக்கிய முஸ்லிம்கள் இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளதையும் Fides செய்தி நிறுவனத்திடம் குறிப்பிட்டார். 

ஆதாரம் : Fides/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.