2016-03-05 14:05:00

இது இரக்கத்தின் காலம் - உறவு முறிவுகளைக் குணமாக்க...


இலக்கியத்தில் நொபெல் பரிசு வென்ற அமெரிக்க எழுத்தாளர் Ernest Hemingway அவர்கள் எழுதிய ‘The Capital of the World’ என்ற சிறுகதையில், இடம்பெறும் ஒரு நிகழ்வு இது:

ஸ்பெயின் நாட்டில் வாழ்ந்த தந்தை ஒருவருக்கும், ‘பாக்கோ’ (Paco) என்ற அவரது 'டீன் ஏஜ்' மகனுக்கும் இடையே உறவு முறிந்தது. வீட்டைவிட்டு வெளியேறிய  பாக்கோவைத்  தேடி அலைந்தார் தந்தை. இறுதியில், அவர் ஸ்பெயின் நாட்டின் தலைநகரான மத்ரித் சென்று தேடினார். பல நாட்கள் தேடியபின், ஒருநாள் செய்தித்தாளில் விளம்பரம் ஒன்று வெளியிட்டார்: “Paco, meet me at the Hotel Montana. Noon Tuesday. All is forgiven. Papa” "பாக்கோ, மொன்டானா ஹோட்டலில் என்னைச் சந்திக்க வா. உனக்காக நான் செவ்வாய் மதியம் அங்கு காத்திருப்பேன். அனைத்தும் மன்னிக்கப்பட்டுவிட்டன. இப்படிக்கு, அப்பா" என்ற வார்த்தைகள், அவ்விளம்பரத்தில் காணப்பட்டன. செவ்வாய் மதியம் மொன்டானா ஹோட்டலுக்குச் சென்ற அப்பாவுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. 800க்கும் அதிகமான இளையோர் ஹோட்டலுக்கு முன் திரண்டிருந்ததால், கூட்டத்தைக் கட்டுபடுத்த காவல்துறை வரவழைக்கப்பட்டது.

‘பாக்கோ’ (Paco) என்பது, ஸ்பெயின் நாட்டில் பலரும் பயன்படுத்தும் ஒரு செல்லப்பெயர். அங்கு வந்திருந்த அனைவருமே பாக்கோ என்ற பெயர் கொண்டவர்கள். அதுமட்டுமல்ல, அவர்கள் அனைவருமே அப்பாவுடன் ஏற்பட்ட மோதலில் வீட்டைவிட்டு வெளியேறியவர்கள். அவர்கள் அனைவரும் தங்கள் தந்தையை எதிர்பார்த்து, அங்கு காத்திருந்தனர் என்று, Hemingway அவர்கள் தன் சிறுகதையை முடித்துள்ளார்.

குடும்பங்களில் ஏற்படும் உறவு முறிவுகளால், வீட்டில் இருந்தவண்ணம், அல்லது வீட்டைவிட்டு வெளியேறி காணாமற்போகும் மகன், மகள், பெற்றோர், கணவன், மனைவி, வயதான தாத்தா, பாட்டி என்று... இந்தப் பட்டியல் மிக நீளமானது.

தவக்காலம் ஒப்புரவின் காலம். இரக்கத்தின் யூபிலியில் நாம் கடைபிடிக்கும் தவக்காலம், இந்த உறவு முறிவுகளைக் குணமாக்க தகுந்ததொரு காலம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.