மார்ச்,03,2016. ஹாலிவுட் திரையுலகில் உயரிய மதிப்புடன் கருதப்படும் ‘ஆஸ்கர்’ விருதினை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வாழ்நாள் சாதனை பிரிவுக்காக தமிழர் ஒருவர் வென்றுள்ளார்.
இவருக்கு முன்னதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் ‘ஆஸ்கர்’ விருது பெற்ற முதல் தமிழர் என்ற பெருமையைப் பெற்றிருந்தார். தற்போது, காட்டலாங்கோ லியோன் (Cottalango Leon) என்பவர் ‘ஆஸ்கர்’ விருது பெற்ற இரண்டாவது தமிழர் என்ற அடையாளத்தைப் பெற்றுள்ளார்.
'அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாதனை' (Scientific and Technical Achievements) பிரிவில் லியோன் அவர்கள் 2016-ம் ஆண்டுக்கான ‘ஆஸ்கர்’ விருது பெற்றுள்ளார். சோனி பிக்சர்ஸின் இமேஜ் ஒர்க்ஸ் பிரிவில் பணியாற்றும் இவர், ‘இட்வியூ’ (itview) எனப்படும் புதிய மென்பொருளை கண்டுபிடித்ததற்காக இந்த விருதைப் பெற்றுள்ளார். சாம் ரிச்சர்ட்ஸ், ராபர்ட் ஜே ஆகியோருடன் லியோன் அவர்கள் இவ்விருதை கூட்டாக பெற்றுள்ளார்.
திரைப்படத்தை பகுதி, பகுதியாக ஆய்வு செய்வதற்கு ‘இட்வியூ’ மென்பொருள் மிகவும் உதவியாக உள்ளதென பல்வேறு கலைஞர்கள் தெரிவித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்த காட்டலாங்கோ லியோன், கோவையில் வளர்ந்தார். அமெரிக்காவின் மேசசுஸட்ஸ் நகரில் மேற்படிப்பை பயின்றார். பின்னர் சோனி இமேஜஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.
20 ஆண்டுகளாக அமெரிக்காவில் வாழ்ந்தாலும், அழகாகத் தமிழ் பேசும் லியோன் அவர்கள், அடுத்த தலைமுறையினருக்கு தமிழ் மிகவும் அவசியம் என்றும், தன் மகள் தமிழில் பேச, எழுத தான் ஊக்குவிப்பதாகவும் கூறினார். Los Angeles மாநகரில் ஒரு பள்ளியில் தமிழாசிரியராகவும் அவர் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |