2016-03-02 16:11:00

புனித பேதுரு வளாகத்தில், இலவச மருத்துவமனை


மார்ச்,02,2016. புனித பேதுரு வளாகத்தில் இரக்கத்தின் மற்றொரு முயற்சியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தூண்டுதலால் தான் துவங்கியிருப்பது, மகிழ்வைத் தருகிறது என்று, திருத்தந்தையின் தர்மப் பணிகளுக்குப் பொறுப்பாகச் செயலாற்றும் பேராயர், கோன்ராட் கிரயெவ்ஸ்கி (Konrad Krajewski) அவர்கள் கூறினார்.

உரோம் நகரில் உள்ள வீடற்றோரின் மருத்துவத் தேவைகளை நிறைவேற்ற, புனித பேதுரு வளாகத்தில், பிப்ரவரி 29, இத்திங்களன்று இலவச மருத்துவமனை ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

உரோம் நகரில் இயங்கிவரும் ஏனைய மருத்துவ அமைப்புக்களுடன் இணைந்து, வசதியற்ற வறியோருக்கு இலவச மருத்துவ உதவிகள் கிடைக்கும் வண்ணம், இந்த மருத்துவ மனை திறக்கப்பட்டுள்ளது என்று, பேராயர் கிரயெவ்ஸ்கி அவர்கள் கூறினார்.

வீடற்ற வறியோர் குளிப்பதற்கும், சிகைத்திருத்தம் பெறுவதற்கும் புனித பேதுரு வளாகத்தில் ஏற்கனவே வசதிகள் உள்ளன என்பதும், வீடற்றவர்கள் இரவில் உறங்குவதற்கு, வளாகத்தின் அருகில், இயேசு சபையினர் நடத்தி வரும் இல்லம் ஒன்று உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கவை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.