2016-03-02 15:38:00

சிரியாவில் காரித்தாஸின் பணிகள், திருஅவைக்கு ஒரு சான்றிதழ்


மார்ச்,02,2016. சிரியாவில் துன்புறும் மக்களை மனதில் கொண்டு, அரசியல் தலைவர்களும், உலக சமுதாயமும், தங்கள் சுயநலன்களையும், பேராசையையும் களைந்து, அந்நாட்டின் துயரங்களுக்கு நிரந்தரத் தீர்வு காணவேண்டுமென்று, அகில உலக காரித்தாஸ் அமைப்பின் தலைவர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.

உலக காரித்தாஸ் அமைப்பு, சிரியாவிலும் ஈராக்கிலும் செய்து வரும் மனிதாபிமானப் பணிகளை அண்மையில் பார்வையிட்ட மணிலாப் பேராயர், கர்தினால் தாக்லே அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில், உலகச் சமுதாயத்திற்கு தான் விடுக்கும் விண்ணப்பம் பற்றி குறிப்பிட்டார்.

50 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தில், 10 இலட்சம் புலம் பெயர்ந்தோர் வந்திருப்பதை ஒரு பெரும் நெருக்கடி என்று ஊடகங்கள் கூறுவதை சுட்டிக்காட்டிய கர்தினால் தாக்லே அவர்கள், 40 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட லெபனான் நாட்டில், சிரியாவிலிருந்து தஞ்சம் புகுந்திருக்கும் 10 இலட்சம் புலம் பெயர்ந்தோர், அந்நாட்டின் பொருளாதரத்திற்கு பெரும் சுமையாக உள்ளனர் என்பதையும் கவலையுடன் குறிப்பிட்டார்.

தான் மேற்கொண்ட பயணத்தின்போது, ஒரு முஸ்லிம் இல்லத்தலைவர், "காரித்தாஸ் நீடூழி வாழ்க! கத்தோலிக்கத் திருஅவை நீடூழி வாழ்க" என்று குரல் எழுப்பி சொன்னது, காரித்தாஸ் அமைப்பு, இஸ்லாமியரிடையே ஆற்றிவரும் பணிகளுக்கும், அதற்குப் பின்புலமாய் இருந்து செயலாற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மென்மையான உள்ளத்திற்கும் ஒரு சான்றிதழ் போல தன்னால் உணர முடிந்ததென்று கர்தினால் தாக்லே அவர்கள் கூறினார்.

கர்தினால் தாக்லே அவர்கள் மேற்கொண்ட இந்தப் பயணத்தின்போது, பிலிப்பின்ஸ் நாட்டிலிருந்து வெளியேறி, மத்தியக் கிழக்கு நாடுகளில் பணியாற்றிவரும் தொழிலாளர்களைச் சந்தித்தது குறித்தும், அவர்கள் அனுபவிக்கும் அநீதமானச் சூழல்கள் குறித்தும் தன் பேட்டியில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.