பிப்.29,2016. பெரிய காரியங்களிலிருந்தோ, அதிகாரம் அல்லது செல்வத்திலிருந்தோ, குருகுலத்திடமிருந்தோ அல்லது அரசியல் கட்சிகளிடமிருந்தோ கடவுளின் மீட்பு வருவதில்லை, மாறாக, அது, கடவுளின் சிறிய மற்றும் எளிமையான காரியங்களிலிருந்தே வருகின்றது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இத்திங்கள் காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இந்நாளைய திருப்பலி வாசகங்களை மையப்படுத்தி மறையுரை வழங்கிய திருத்தந்தை, மீட்புப் பற்றிய வழிகளை இயேசு பரிந்துரைக்கும்போது, பெரிய காரியங்கள் பற்றி அவர் ஒருபோதும் பேசியதில்லை, ஆனால் சிறிய காரியங்கள் பற்றியே பேசினார் என்று கூறினார்.
மறைநூல் அறிஞர்கள் மற்றும் சதுசேயர்களின் மீட்புப் பற்றிய எண்ணங்கள் பற்றி மறையுரையில் குறிப்பிட்ட திருத்தந்தை, மக்கள், இந்தக் குருகுல மற்றும் அரசியல் கட்சிகளில் நம்பிக்கை வைக்கவில்லை, ஆனால் இயேசுவில் நம்பிக்கை வைத்தனர் என்றும் கூறினார்.
கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழாவுக்குத் தயாரித்து வரும் நாம், இயேசுவின் மலைப்பொழிவு, மத்தேயு நற்செய்தி 25ம் அதிகாரம் ஆகியவற்றை வாசித்து, அவை இதயத்தில் ஏற்படுத்தும் மாற்றத்தைக் கவனிக்குமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
திருச்சலுவையின் மடமையே, மீட்பின் ஒரே பாதை என்பதைப் புரிந்து கொள்வதற்கு ஆண்டவரிம் அருள் வேண்டுவோம் என்றும் மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |