2016-02-27 15:46:00

உணவுப் பயிர்கள், மற்றும் வாழ்வாதாரங்களுக்கு ஆபத்து


பிப்.27,2016. மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் தேனீக்களும், ஏனைய பூச்சி வகைகளும் அழியும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதால், உலகெங்கும் உள்ள உணவுப் பயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. அறிக்கை ஒன்று கூறுகிறது.

குறிப்பாக, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளில் பல்வகை தேனீக்களும் வண்ணத்துப்பூச்சிகளும் அழிவுப் பாதையில் உள்ளன என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹமிங் பறவைகள், வண்டுகள் மற்றும் வெளவால்களும் அழிவை நோக்கிய ஆபத்தை எதிர்கொண்டுள்ளன என்றும், காலநிலை மாற்றம் மற்றும் பூச்சிக்கொல்லிகளும்கூட இவற்றிற்குப் பெரும் சவாலாக உள்ளன என்றும் அவ்வறிக்கை தெரிவிக்கிறது.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பூமியில் உள்ள பல்வகை உயிரினங்கள் பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டுவரும் உலகெங்கிலும் உள்ள ஆய்வாளர்களின் ஆய்வின் முடிவாக இவ்வறிக்கை வெளிவந்துள்ளது.

மகரந்த சேர்க்கைக்கு உதவும் வண்டுகளும் பூச்சிகளும் பெருமளவில் இல்லாமல் போனால், முக்கியமான சில விளைச்சல்கள் இல்லாமல் போகும் அல்லது அதன் உற்பத்தி வீழ்ச்சியடையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான பூச்சிகளுக்கும் வண்டுகளுக்கும் உதவும் வகையில் வீட்டுத் தோட்டங்களில் நாம் பூச்செடிகளை நடலாம் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : பிபிசி / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.