2016-02-22 15:05:00

ஆபத்தான கடல் பயணமும், குழந்தைகளின் இறப்பு அதிகரிப்பும்


பிப்.22,2016. மத்திய தரைக் கடலின் கிழக்குப் பகுதியை, குடும்பங்கள் கடப்பதற்கு முயற்சிக்கும் ஆபத்தான பயணத்தில், 2015ம் ஆண்டு செப்டம்பரிலிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு குழந்தைகள் வீதம் நீரில் மூழ்கி இறக்கின்றன என்று ஐ.நா.வின் மூன்று நிறுவனங்கள் கூறுகின்றன.

ஐ.நா. புலம்பெயர்ந்தவர் நிறுவனம், ஐ.நா.குழந்தைகள் நல நிறுவனம், உலக குடிபெயர்வோர் நிறுவனம் ஆகிய மூன்றும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், சண்டைகள் மற்றும் துன்பங்களிலிருந்து தப்பிப்பதற்காக ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொள்ளும் மக்களின் பாதுகாப்புக்கு உறுதி வழங்கப்படுமாறு கேட்டுள்ளன.

கடந்த செப்டம்பரிலிருந்து 340க்கும் மேற்பட்ட சிறார், கிழக்கு மத்திய தரைக் கடல் பகுதியில் நீரில் மூழ்கி இறந்துள்ளனர், இதன் உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகம் இருக்கலாம் என்றும் ஐ.நா. நிறுவனங்கள் கூறுகின்றன.

புலம்பெயரும் மக்களுள் 36 விழுக்காட்டினர் சிறார் என்றும், 2016ம் ஆண்டின் முதல் ஆறு வாரங்களில் மத்திய தரைக் கடலின் கிழக்குப் பகுதியைக் கடந்த எண்பதாயிரம் பேரில், 410 பேர் நீரில் மூழ்கி இறந்தனர் என்றும் ஐ.நா. கூறியுள்ளது. 

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.