2016-02-08 16:56:00

மதத்தின் அடிப்படையில் கொலை செய்யப்படுவது, இனப் படுகொலையே


பிப்.08,2015.  கிறிஸ்தவர்களும் ஏனைய சிறுபான்மைப் பிரிவினரும், தீவிரவாதக் கும்பல்களால் கொல்லப்பட்டுவருவதை, 'இனப்படுகொலை' என ஐரோப்பிய பாராளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது குறித்து, பாராட்டுக்களை வெளியிட்டுள்ளது ஐரோப்பிய ஆயர் பேரவை.

கிறிஸ்தவர்களும் சிறுபான்மை மக்களும் கொல்லப்படுவதை தடை செய்ய இத்தீர்மானம் பேருதவியாக இருக்கும் எனக் கூறும் ஐரோப்பிய ஆயர்கள், மத நம்பிக்கையின் அடிப்படையில் மக்கள் கொல்லப்படுவது, இனப்படுகொலையே என தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.

கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, எந்த ஒரு மத நம்பிக்கையாளரும், தங்கள் நம்பிக்கைக்காக கொல்லப்படுவதை, இனப்படுகொலையாக கருதவேண்டும் என வலியுறுத்தி, ஐ.நா. பாதுகாப்பு அவைக்கும் தன் தீர்மானத்தை அனுப்பியுள்ளது, ஐரோப்பியப் பாராளுமன்றம்.

இத்தகையத் தீர்மானம், மதங்களிடையே நல்லுறவை வளர்ப்பதற்கும், பல மதங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து வாழ்வதற்கும், மதத் தீவிரவாதத்தில் ஈடுபடுவோர் தண்டனை பெறுவதற்கும், உதவும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளது, ஐரோப்பிய ஆயர் பேரவை.

ஆதாரம் : ICN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.