2016-02-04 16:40:00

ஓட்டளிக்காமல் இருப்பதும் கிறிஸ்தவத் தெரிவே - ஆயர்கள்


பிப்.04,2016. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாருமே தகுதியற்றவர்கள் என்றால், ஓட்டளிக்காமல் இருப்பதும் சரியான கிறிஸ்தவத் தெரிவே என்று பிலிப்பைன்ஸ் ஆயர்கள் அந்நாட்டு மக்களுக்கு செய்தியொன்றை அனுப்பியுள்ளனர்.

நெருங்கிவரும் தவக்காலத்தையும், மேமாதம் தங்கள் நாடு எதிர்கொள்ளும் தேர்தலையும் மனதில் கொண்டு, "வாழ்விலும், செயல்களிலும் திருநற்கருணையாக இருப்பது" என்ற தலைப்பில், பிலிப்பைன்ஸ் ஆயர்கள் மேய்ப்புப்பணி சுற்றறிக்கை ஒன்றை, இப்புதனன்று வெளியிட்டனர் என்று UCAN செய்தி கூறுகிறது.

வேட்பாளர்கள் அனைவரும் தீமை செய்தவர் என்பதை உணர்ந்தால், அவர்களில் குறைவான தீமை செய்தவரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று எண்ணுவதும், தீமைக்குத் துணைபோவதே என்பதை வலியுறுத்தியுள்ள ஆயர்கள், யாருமே தகுதியில்லை என்பதை உணர்ந்தால், ஓட்டளிக்காமல் இருப்பதும் ஒரு சிறந்த முடிவே என்பதை ஆயர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

பணத்தாலும், வேறுபல வன்முறைகளாலும் அரசு பொறுப்புக்களைத் திருடிக்கொள்ளும் வேட்பாளர்கள் யாருமே மக்களை ஆள்வதற்குத் தார்மீக உரிமை பெற்றவர்கள் அல்ல என்று ஆயர்களின் அறிக்கை எடுத்துரைக்கிறது. 

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.