2016-02-03 17:27:00

இராஞ்சி உயர் மறைமாவட்டத்தில் புதிய மருத்துவமனை


பிப்.03,2016. இராஞ்சி உயர் மறைமாவட்டத்தில், இயேசு சபை அருள் பணியாளர், கான்ஸ்டன்ட் லீவன்ஸ் (Constant Lievens) அவர்கள் பெயரால் ஒரு மருத்துவக் கல்லூரியும், மருத்துவ மனையும் உருவாக்கப்படும் என்று இராஞ்சி துணை ஆயர், தியோடோர் மஸ்கரேனஸ் அவர்கள், ஆசிய செய்தியிடம்  கூறினார்.

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் வறியோர் அதிகம் வாழும் பகுதியில் உருவாக்கப்படும் இந்த மருத்துவ மனையில், 500க்கும் மேற்பட்டோர் தங்கி, சிகிச்சை வசதிகள் பெற முடியும் என்று ஆயர் மஸ்கரேனஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.

இந்திய ஆயர் பேரவையின் ஆதரவுடன் துவங்கவிருக்கும் இந்த முயற்சியால், ஜார்க்கண்ட் பகுதியில் வாழும் பழங்குடியினர் நல வாழ்வு மேம்படும் என்றும், அப்பகுதி இளையோர் மருத்துவ படிப்பை மேற்கொள்ளும் வாய்ப்புக்களும் உருவாகும் என்றும் ஆயர் மஸ்கரேனஸ் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்திய ஆயர் பேரவையின் ஆதரவு பெற்றுள்ள இந்த முயற்சிக்கு மக்களின் நிதி உதவியும், செபங்களும் அதிகம் தேவை என்ற விண்ணப்பத்தையும் ஆயர் மஸ்கரேனஸ் அவர்கள் ஆசிய செய்தி வழியே விடுத்துள்ளார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.