2016-01-30 15:12:00

திருநற்கருணைப் பணியாளர் அமைப்பில் 20 இலட்சம் உறுப்பினர்கள்


சன.30,2016. திருஅவையின் திருநற்கருணைப் பணியாளர்கள் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் வளர்ந்து வருகிறது என்று, இவ்வமைப்பின் புதியத் தலைவரான, ஹோசே ஏஞ்செல் லினாரஸ் (Jose Angel Linares) அவர்கள் கூறினார்.

உலகின் 26 நாடுகளில், 39 கிளைகளைக் கொண்டுள்ள இந்த அமைப்பைச் சார்ந்தவர்களின் எண்ணிக்கை, 20 இலட்சத்தைத் தாண்டியுள்ளதென்று பிலிப்பைன்ஸ் ஆயர் பேரவையின் அறிக்கை கூறுகிறது.

கடந்த 50 ஆண்டுகளாக செயலாற்றிவரும் இவ்வமைப்பைச் சேர்ந்தவர்கள், ஒவ்வொரு முறையும் திரு நற்கருணை உலக மாநாடு நடைபெறும் நேரத்தில், தங்கள் அமைப்பின் தலைவரைத் தேர்வது வழக்கம்.

தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டின் செபு நகரில் நடைபெற்று வரும் 51வது திரு நற்கருணை உலக மாநாட்டில் கலந்துகொள்ள வந்துள்ள உறுப்பினர்கள், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த லினாரெஸ் அவர்களை, தலைவராகத் தேர்ந்துள்ளனர்.

திரு நற்கருணை உலக மாநாட்டின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் திருப்பீட அவையின் தலைவர், பேராயர் பியெரோ மரீனி அவர்கள், இவ்வமைப்பினரின் கூட்டத்தில், கலந்துகொண்டார் என்றும், இவ்வமைப்பின் புதிய உறுப்புக்களாக, ஐரோப்பாவைச் சேர்ந்த மேலும் ஒன்பது குழுக்களை இவ்வமைப்பில் இணைத்தார் என்றும், பிலிப்பைன்ஸ் ஆயர் பேரவை அறிக்கை மேலும் கூறுகிறது.

ஆதாரம் : CBCP / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.